சமீபத்தில் இரண்டு புத்தகங்களை வாசித்தேன். ஒன்று சிறந்த கட்டுரை. மற்றொன்று மார்க்விசின் நூற்றாண்டு தனிமையில் நாவலை தழுவிய ஒரு தமிழ் நவீன நாவல். இந்த நாவல் மார்க்விசை விட சிறந்த நாவல் என்று சொல்லுவேன். அடுத்த முறை இந்த நவீனத்திற்கு கண்டிப்பாக நோபல் பரிசை கொடுத்தாக வேண்டும். கட்டுரையை பற்றி சொல்ல வேண்டுமே. அது என்னுடையது தான். இந்திய ஆங்கில நாவல் ௨௦௨௦ பற்றிய மிக நீண்ட கட்டுரை . இது ஒரு பக்தினிய அணுகுமுறை. எப்படி பலக்குரல்கள் உத்தி இந்த நாவலில் உள்ளது என்பதை பற்றிய கட்டுரை. இந்தக் கட்டுரையும் நவீனமும் இந்நூற்றாண்டின் முக்கியமான படைப்புகள். இரண்டும் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட வேண்டியவைகள்.
Saturday, December 17, 2016
Monday, November 28, 2016
கோட்பாடு வேறு உண்மை வேறு. கோட்பாட்டை ஒரு இயக்கத்திற்கு உரியதாக/சொத்தாக வைத்துக் கொண்டாடலாம். கோட்பாடு ஒரு இயக்கத்திற்கு அப்பழுக்கற்ற உண்மையாகவும் இருக்கலாம். ஆனால் உண்மை கோட்பாடாக மாறமுடியாது. உண்மைக் கோட்பாடு அல்ல. அப்படி என்றால் கோட்பாடு என்பது என்ன என்பதுதான் கேள்வி. தலை சுற்றுகிறது. விதியே என்று ஒரு சாராரின் கொள்கைகளை வாழ்க்கையாக வாழ்ந்து விட்டால் பிரச்சனையே இல்லை. கொள்கையற்று எங்கும் காணக் கிடைக்காத உண்மையைத் தேடி அலைவதுதான் மரணத்தின் வலி. இருப்பினும் இந்துவில் THE AGE OF POST-TRUTH POLITICS என்னும் தலைப்புக் கொண்ட நடுப் பக்கப் பத்தி சற்று ஆறுதல் அளிக்கிறது.
Tuesday, November 22, 2016
குழப்பத்தின் யுகம் நம்முடைய யுகம், அதன் குழப்பத்தை ஏற்க நாம் மறுக்கிறோம்
இருபதாம் நூற்றாண்டு மிகவும் கொடூரமான
நூற்றாண்டு. உலகப்போர்களைக் கண்ட நூற்றாண்டு அது. அதனிடம் திரும்பிச் செல்ல யாருமே
விரும்ப மாட்டார்கள். படைப்பாளிகள் கூட அதனை அப்படியே தங்களுடைய கதைகளில் காட்சிப்படுத்தவில்லை.
போர்களை காட்ட காதல் காவியங்கள் மாத்திரமே அதனை பேசுவதற்கு துணை நின்றன. நேரில் பார்த்து
சகிக்ககூடாத யுகம் அது. அது தன்னை தற்போது கதைகள் மூலமாக நம்மை திருபத் திரும்ப நான்
மீண்டும் வருவேன் என்று பயமுறுத்திக் கொண்டே இருக்கிறது. நாமும் அது தரும் அச்சத்திலேயே
நம்முடைய இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அந்த நூற்றாண்டு
எப்போது வெடித்தெழும்புமோ என்ற மெல்லியதான அச்சம் தேசிய/சர்வதேசிய அளவில் மாற்றங்கள் ஏற்படும்
போது துளிர்க்க ஆரம்பிக்கிறது. இருந்தாலும் அந்த அகோரமான நூற்றாண்டு நம்மிடம் கண்ணாமூச்சி
ஆட்டம் ஆடிக்கொண்டேயிருக்கிறது.
Wednesday, November 16, 2016
உலகப் புகழ் பெற்ற பேனா
உலகப் புகழ் பெற்ற பேனா
என்னுடைய பௌண்டன் பேனா ஆயிரம் ரூபாய்.
வாங்கியபோது அதிகம் விலை கொடுத்து ஏமாந்து விட்டேனோ என்ற குற்ற உணர்வு தொடந்து இருந்து
கொண்டே இருந்தது. ஏறக்குறைய ஒரு ஆண்டிற்கு யாரிடமும் அதனுடைய விலையைப் பற்றி சொல்லவே
இல்லை. யாரேனும் “என்ன விலை” என்று கேட்டாள் அன்பளிப்பு என்று மழுப்பி விடுவென். திறந்து
பார்த்து விட்டு ”இரிடியம் பாய்ன்ட்” என்று சொல்லி அதிகம் விலை இருக்கும் என்று திரும்பத்
தந்து விடுவார்கள். அதுதான் என் பேனாவைப் பற்றிய முதல் அறிவுத் தகவல். அது வரை இரிடியம்
பாயின்ட் பேனாவிற்கும் மற்ற பேனாக்களுக்கும் எந்த வித்தாசமும் தெரியாது. தெரிந்திருக்க
அவசியமும் இருந்திருக்கவில்லை. பள்ளிக் கூடத்தோடு எல்லாம் முடிந்து விட்டது. அப்போதெல்லாம்
Ink பேனா அவ்வளவு பெரிய விஷயமாக இருக்காது. அப்போது இருந்த ரெனால்ட்ஸ் பேனாக்கள் தான்
அதிகம் கவனத்தை ஈர்க்கும். அந்தப் பேனாக்களுக்கே டியூப்ளிக்கேட் வந்து கொண்டிருந்தது.
ரெனாட்ஸ் நான்கு ரூபாய் என்றால் போலி ஒரு ரூபாய். எனினும் பௌண்டன் பேனா பக்கம் கவனம்
திருபியதே கிடையாது. அது ஒரு பொருட்டாகவே இருந்ததில்லை. எனது பக்கத்து தெரு பையன் அவனுடைய
ஜாமன்ட்டரி பாக்ஸில் குறைந்தது ஏழு ரெனால்ட்ஸ் பேனாக்களாவது வைத்திருப்பான். ஒன்றையாவது
தரமாட்டனா என்ற ஏக்கம் அவைகளைப் பார்க்கும் போதெல்லாம் இருக்கும்.
Monday, November 14, 2016
கெய்ஷா: ஆண் அகங்காரத்தின் மீட்டெடுப்பு
கெய்ஷா: ஆண் அகங்காரத்தின் மீட்டெடுப்பு
ஜெயமோகனின் கெய்ஷா சிறுகதை தன்னில் தானே ஒரு வசிகரத்தை வைத்துக் கொண்டு வாசிப்பை வலியின்றி தன்னுள் இலகுவாக பயணிக்கச் செய்யும் கதையாகும். அவருடைய வலைபக்கத்தில் கதையை பார்த்தவுடன் முழுவதையும் வாசித்து விட வேண்டும் என்ற தீர்மானம் ஏற்பட்டது. கதை ஆரம்பித்ததுதான் தெரியும் எப்படி முடிந்தது என்று எண்ணம் கொஞ்சம் கூட இல்லை. அதுதான் ஒரு சிறந்தக் கதைக்கான இயல்பு. உண்மையில் அன்று காலை, வாசிப்புக்கு ஏற்ற காலையாக இருக்கவில்லை. நோக்கம் எதுவும் இன்றி எதை எதையோ இயந்திரத்தனமாக செய்து கொண்டிருந்தேன். அந்தத் தருணத்தில் கதை தன்னுடையை கரங்களை கெய்ஷாவைப் போல் தன்னுள் என் வாசிப்பை அரவணைத்துக் கொண்டது.
Friday, November 11, 2016
தண்டனைக்கான காரணம்: குற்றமா தப்பிக்க வழியின்மையா?
தண்டனைக்கான காரணம்: குற்றமா தப்பிக்க
வழியின்மையா? (கோமாளிக் குயிஸாட்டின் பதில்கள்)
சமுகத்தில் பாவப்பட்டவர்கள் என்று யாரேனும்
ஒரு குழுவினர் இருக்கிறார்களா. அப்படி இருந்தால் அவர்களுக்கான மீட்பு என்பது அவசியப்படுகிறதா.
அப்படியே அவர்களை விடுதலையாக்க ஒருவன் வந்தாலும் அவன் தரும் விடுதலையை ஏற்பதற்கு அந்த
அடிமைப்பட்ட மக்கள் தயாராக இருப்பார்களா. இவைகள் எல்லாம் இன்னும் புரிந்து கொள்வதற்கு நம்மால் முடியவில்லை.
இலட்சியவாதிகள் எப்போதும் தாங்கள் பாவ பட்ட ஜென்மங்களை விடுவிக்க பிறந்த மகா புருஷர்கள்
என்றே நம்பிக் கொண்டிருக்கின்றனர். உண்மையில் யாரும் தங்களுக்கான விடுதலையை விரும்பியதும்
இல்லை உணர்ந்ததும் இல்லை. விடுதலை தேவை என்ற உணர்வு ஏற்பட்டால் தானே அவர்களுக்கு கிடைக்கப்போகும்
விடுதலையை உண்மையான விடுதலை என்றும் தாங்கள் பாவப்பட்டவர்கள் என்றும் உணர்வார்கள்.
சொல்லப்போனால் பாவப்பட்டவர்கள், ஆள்கிறவர்கள், அடிமைப்பட்டவர்கள் என்று யாரும் கிடையாது.
இதெல்லாம் நாம் உருவாக்கிக் கொண்டிருக்கும் கற்பனை பிம்பங்களே.
வெண்ணிற இரவுகள்: நவீனக் காதலின் ஏமாற்றங்கள்
வெண்ணிற இரவுகள்: நவீனக் காதலின் ஏமாற்றங்கள்
நம்
ஐம்புலன்களைக் கொண்டு இந்த பிரபஞ்ச வெளியை பார்க்கிறோம், சுவாசிக்கிறோம், கேட்கிறோம்,
தொட்டு உணருகிறோம். இதற்கு மீறியும் இந்த ஐம்புலன்களின் கூர்மையான செயல்பாட்டிற்கு
மீறி ஏதோ ஒரு விதத்தில் எதேனும் ஒரு புலன் மாத்திரம் அது செயல்படுகின்றதாக இருப்பினும்
திறன் அற்றதாக இருக்கிறதோ என்ற எண்ணம் நேற்று வெண்ணிற இரவுகள் கதையை வாசிக்கும்
போது ஏற்பட்டது. கதையின் நாயகன் பேசுவதற்கு வாய் இருந்தும் பேச்சற்றவன். அவன் ஒவ்வொரு
இரவாக சந்திக்கும் அந்தப் பெண் ஏதோ ஒரு விதத்தில் கண்கள் இருந்தும் பார்வை அற்றவள்.
உடல் என்கிற புறச்சட்டகத்திற்குள் சிக்கிக் கொண்டிருக்கும் உள் மனதிற்கும் கூட இப்படிப்பட்ட
உணர்வுகள் இருக்கின்றனவே என்று கதையை வாசித்து முடித்த பின்பு ஏற்பட்டது. உள் மனது
பார்க்கிற, கேட்கிற, உணருகிற சாளரங்கள் தான் நம்முடைய உடலின் புலன்களோ என்று கூட யோசிக்கத்
தோன்றுகிறது.
Wednesday, November 9, 2016
பணம் பொய்த்த நிலையும், வாசிக்கவிருக்கும் செல்லாத பணமும்
தி இந்து - The Hindu256 × 207Search by image
பணம் பொய்த்த நிலையும், வாசிக்கவிருக்கும் செல்லாத பணமும்
பணம் பொய்த்த நிலையும், வாசிக்கவிருக்கும் செல்லாத பணமும்
அநீதிகள் நிகழும் போது யாரோ ஒருவர் ஏதோ ஒரு விதத்தில்
அதற்கெதிரான எதிர்குரலை எழுப்பிக் கொண்டே இருக்கிறார்கள். அக்குரல்கள் ஏதோ ஒரு பாதுகாப்பு
வலையத்திற்குள்ளாக தங்களைப் பாதுகாத்துக் கொண்டே கூச்சலிட்டுக் கொண்டிருக்கின்றன. எதிர்க்குரல்கள் எப்போதும் எதிர்குரல்களாக இருப்பதில்லை. அவைகள் பாதுகாப்பு என்கிற காப்பீட்டின் உதவியில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அநீதியும் சரி அதற்கான எதிர்க்குரலும் சரி ஏதோ ஒரு
விதத்தில் ஒன்றுடன் ஒன்று உடன்பட்டுத்தான் செயல்படுகின்றன. இவைகள் இரண்டிற்கும் மத்தியில்
ஏதோ ஒன்றின் செயல்பாட்டிற்கு நாம் தலையசைத்து ஆமோதித்தே ஆக வேண்டியிருக்கிறது. எதிர்க்குரலின் புரட்சிதன்னமைக்கு இசைந்து செயல்படுவதுதான் மிகவும்
ஆபத்தானது. அது வெறும் எதிர்ப்புக் குரல் மாத்திரமே. பிரச்சனை இங்கு என்னவெனில் இன்று
எது எதிர்க்குரலாக இருக்கிறதோ அதுதான் நாளைக்கான அதிகாரத்தின் குரல். அதிகாரத்தின்
குரலும் சரி புரட்சிக் குரலும் சரி எதோ ஒரு விதத்தில் ஒன்றாகத்தான் இயங்குகின்றன. இன்று
ஒரு குரலின் புரட்சி உத்வேகம் மேலோங்கி நிற்கும் போது அதுதான் நாளைக்கான அதிகாரத்தின்
சிம்மாசனம். அந்த சிம்மாசனத்தை அடைவதற்கான விலைதான் இன்றைய புரட்சியின் வலிகள் வீரப்போர்கள்
அனைத்தும். கண்டிப்பாக பரிசு ஒன்று இருக்கிறது. எந்த இலட்சியவாதியும் இதற்கு விதிவிலக்கல்ல.
இது ஒரு முரணியக்கம். இந்த Binaryக்கு மத்தியில் யார் ஒருவரும் தலையிடக்கூடாது. முரணியக்கங்களின்
நிலைப்பாடு வேண்டுமானால் மாறுபடலாம் எனினும் அவைகள் ஒன்றுக்கொன்று இரட்டைத்தன்மையில்
எப்போதும் தங்கள் இருத்தலைப் பாதுகாத்துக் கொண்டே இருக்கின்றன. இதில் மூன்றாம் சாராருக்கு
எந்த இடமும் இல்லை. வேடிக்கை மாத்திரம் பார்க்க வேண்டும்.
Sunday, November 6, 2016
ஏதேனின் பாம்புகள்
ஏதேனின் பாம்புகள்
இன்று ஒரு சுவாரசியமான சம்பவம் நடந்தது.
அது அப்படியே MGR ன் எங்கள் வீட்டு பிள்ளை படத்தை நினைவுப்படுத்தியது. சைவ உணவகம் செல்வதற்கு
என் பாக்கட்டில் இருந்த பணம் மிகுந்த தைரியத்தைக் கொடுத்தது. குறைந்தது இருநூறு ரூபாய்
இருந்தால் தைரியமாக உள்ளே நுழைந்து வயிறு நிறைய சாப்பிட்டு விட்டு அந்த இருநூறையும்
கால்லாவில் காலிசெய்து விடலாம். போதுமான பணம் கொடுத்த தைரியம் இன்று நேராக என் கால்களை
***** சைவ உணவகம் நோக்கி தள்ளியது. அதிகம் செலவழிந்தால்? இருநூறை நீச்சயம் தாண்டாது.
அத்தனை காலி மேஜைகள் இருந்தும் அந்த ஒரு இடம் மாத்திரம் ஏன் என்னை அந்த அளவிற்கு ஈர்த்தது
என்று தெரியவில்லை. என் எதிரில் இருந்த அந்தப் பையனுக்கு சுமார் இருபத்தி நான்கு இருபத்தைந்து
வயதிருக்கும். ஏற்கனவே ஒரு தட்டை காலி செய்து விட்டு கடைசியாக ஒரு பிலேட் இட்டிலியை
அமுக்கிக் கொண்டிருந்தான்.
Friday, November 4, 2016
துயருற்றவர்கள்
Fritz Eichenberg, illustrations to Crime and Punishment,1938.
துயருற்றவர்கள்
துயரத்தின் எல்லையைக் கடக்கும் போது அது
ஏற்படுத்தும் வலி தாங்க முடியாதது. அந்த நிலையில் ஒருவர் தன்னுடைய இருப்பை தொடகிறார் என்றால் அவர் நிச்சயம் மாகா புருஷனாகத்தான்
இருக்க வேண்டும். எனினும் மகா புருஷர்களே இன்றைக்கு இவ்வுலகத்தின் வேதனையில் சிக்கித்
தவிக்க முடியாமல் உலகத்தின் பந்தங்களை அறுத்துக் கொண்டு சன்யாசம் வாங்கிக் கொள்கின்றனர்.
வாழ்க்கை அதன் தன் இருத்தலில் மிக துயரகரமானது. இந்தத் துன்பக்கேணியை தவிர்த்து நம்மாள்
வாழ்க்கையை தொடர முடியாது. இந்தத் துன்பக்கேணியின் சாகரத்தில் திளைத்தப்பின்பு நமக்கு
காத்திருக்கும் வாழ்க்கை என்பதுதான் மிகவும் பொக்கிஷமானது. அந்த பொக்கிஷத்தை ஒவ்வொரு
நொடியும் ஊய்த்துணர வேண்டியிருக்கிறது. துன்பதிற்கு பின்வரும் வாழ்க்கையை பொக்கிஷமாக
ஒவ்வொரு நொடியையும் வாழ ஆரம்பிக்கிறார்கள். ஆனால் துன்பத்தின் வலி அதன் எல்லைக் கோட்டை
அத்து மீறினவனுடைய வாழ்க்கையை இன்பமானதாக வைத்திருக்குமா என்பது தான் என்னுடைய முக்கியமான
கேள்வி.
Thursday, November 3, 2016
”நெஞ்சமெல்லாம் வண்ணம் செய்த மாயம்”
”நெஞ்சமெல்லாம் வண்ணம் செய்த மாயம்”
சில நேரங்களில் குறிப்பிட்ட சில அனுபவங்கள்
நம்மைப் பின் தொடர்ந்து கொண்டே இருக்கும். அவைகள் கனவுகளாக, சித்திரங்களாக, கதைகளாக
ஏதோ ஒரு விதத்தில் நம் ஆழ்மனதின் அனுபவங்களின் காட்சிகளாக தங்களை இருத்திக் கொண்டே
இருக்கும். எனினும் அந்தக் குறிப்பிட்ட அனுபவத்தின் சம்பவத்திற்கு நம்மால் கடந்து செல்லவே
முடியாது. ஒரு குறிப்பிட்ட சித்திரத்தை பார்க்கும் போது ஒரு விதமான சோகத்தின் வலி ஏற்படும்.
சில நேரங்களில் சில கனவுகள் அவைகள் நம்முடைய பண்டைய காலத்து அனுபவம் போன்ற உணர்வை ஏற்படுத்தி
விடும். அவைகள் நம்முடைய வயதின் கணக்கை விட ஆண்டுகளின் கணக்கில் மிகவும் தொன்மையானவைகள்
போல் தோன்றும். ஏன் இந்த குறிப்பிட்ட அனுபவங்கள் மாத்திரம் தொன்மையானவைகளாக இருக்கின்றன
என்பது நம்மால் சிந்துத்துப் பார்க்க முடியாதவைகள். இதற்கான விடை நண்பர் ஜெய் தினேஷ்
உடன் உரையாடிக்கொண்டிருக்கும் போது கிடைத்தது.
Tuesday, November 1, 2016
நிஜத்தில் யதார்த்தம் என்று ஒன்று இருக்கிறதா?
நிஜத்தில் யதார்த்தம் என்று ஒன்று இருக்கிறதா?
சிவ விஷ்வநாதன் இந்து ஆங்கில நாளிதழில்
மாதம் ஒருமுறைக்காவது opinion pageல் கட்டுடையை எழுதிவிடுகிறவர். இந்த நடுப்பகுதிப்
பத்தியை (column) வாசிப்பது என்பதே மிகப் பெரிய சாதனையாகும். எழுதுகிறவர்கள் ஒரு குறிப்பிட்ட
துரையின் வல்லுனர்களாக இருப்பவர்கள். அவர்களுடைய பத்தியை வாசித்து முடிப்பது ஒரு அறிவுச்
சுரங்கத்திற்குள் பயணிப்பதற்கு ஒப்பானதாகும்.
சில நேரங்களில் தங்கவேட்டை சாத்தியப்படும். சில நேரங்களில் கடைசி பத்து விரிகளுக்கு
முன்பதாகவே மூச்சு திணறல் ஏற்படும். எனினும் சில பத்தி எழுத்தாளர்களின் பெயரைக் கண்டாலே
மகிழ்ச்சிதான். அதில் முக்கியமானவர் சிவ விஷ்வநாதன். மூன்று ஆண்டுகளுக்கு முன்பதாக
அவருடைய எழுத்தின் மீது ஏதொ ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. அவருக்கு மாத்திரம் கூடதல் கவனிப்பு
செலுத்தி வாசிக்க ஆரம்பித்தோம். தொடர்ந்து அவருடைய கருத்துக்கள் மீதும் ஈர்ப்பு ஏற்பட
ஆரம்பித்தது. இவர் மாத்திரம் மற்றவர்கள் போல் அல்லாமல் ஏதோ ஒன்றை அதுவும் மிகவும் பழகிப்போன
ஒன்றை புதுமையான விதத்தில் பேசுவதைப் போன்று தோன்றியது.
Monday, October 31, 2016
Wish You The Same
Wish You The Same
ஆங்கிலத்தில் ஒருவர் நமக்கு வாழ்த்து கூறும் போது அதற்கு
மறு வாழ்த்து கூறுவது சங்கடமான காரியம். ”Wish You Happy Diwali Sir”. மறுவாழ்த்து கூற தமிழில் இருந்து
அப்படியே மொழிப் பெயர்ப்பு செய்தால் ஊர் சிரித்துவிடும். அதற்காக மௌனம் காக்கவும் முடியாது.
எதையாகிலும் உளறி வைத்துவிட்டால் எல்லாம் முடிந்தது. அவ்வளவுதான். நாம் எவ்வளவு ஆங்கிலத்தில்
உலக இலக்கியத்தை வாசித்திருந்தாலும் அந்த ஒரு நொடிப் பொழுதில் நம்முடைய எல்லா வாசிப்பனுபவமும்
பூஜ்ஜியமாகி விடுகிறது. மறுவாழ்த்து சொல்ல கற்றுத்தராத இலக்கியம் என்ன பெரிய இலக்கியம் என்ற ஆற்றாமை அப்போது
நாம் வாசித்த வாசிப்புகள் அனைத்தின் மீதும் கோபத்தை ஏற்படுத்திவிடும். அதுவும் நவீனத்தின்
மிடுக்கோடு இருக்கிற மாணவர்களைக் கண்டால் போதும் நம்முடைய ஆங்கிலத்தில் இருக்கிற “do”
“does” ஆகிவிடும் “does” “do” ஆகிவிடும்.
Thursday, October 27, 2016
நொடிப்பொழுதில் இலயித்திருக்கும் கவிதைகள்
நொடிப்பொழுதில் இலயித்திருக்கும் கவிதைகள்
[ நேற்று டான் குயிக்ஸாட்டின் எட்டாம் அத்யாயத்தை வாசித்து கொண்டிருக்கும் போது கவிதையைப் பற்றியும் அதில் வரும் பாடு பொருள்களைப் (குறிப்பாக பெண்களின் அழகு) பற்றியும் செர்வான்டஸ் செய்த கோபம் மிகுந்த கேளிக் கிண்டல் அதனைப் பற்றி சிறிது யோசிக்க வைத்தது. அதுபோன்ற சிந்தனைகளை வீணடிப்பது மாபெறும் தவறு என்பதினால் உடனே சிந்தனையை ஐநூறு எண்ணிக்கைகளிலான வார்த்தைகளில் பதிவு செய்து விட்டேன். ]
கவிதை தன் இயல்பில் ஒருபோதும் எதையும்
அதன் இயல்புதன்மையில் வைத்துப் பார்க்காது. ஒரு படி மேலே சென்று அதனை சற்று உயர்த்தி
அல்லது அழகு படுத்தித் தான் காண்பிக்கும். கவிதையின் பாடுபொருள்களே இப்படித்தான். ஒன்று
கிடைத்து விட்டால் போதும் அதனை மெருகேற்றி அதன் இயல்பு தன்மையில் இருந்து சற்று மாற்றித்
தான் காண்பிக்கும். ஏன் இயல்பில் உள்ள பொருட்களை அவைகள் இருப்பது போன்று காட்ட கூடாதா?
இயல்பு நிலை அவ்வளவு அவலட்சணமானதா? இதெல்லாம் நம்மை மீண்டும் மீண்டும் சிந்திக்க வைக்கிறவைகள்.
இது கவிதையின் குணாதசியமா. அல்லது இயல்பு நிலையை ஒருபோதும் அதன் இயல்பு நிலைக்கு மீறி
காட்டமுடியாது என்பதா. சில நேரங்களில் நாம் ஒரு பார்க்கின்ற அனைத்தும் அந்த நொடிக்கானவைகள்
தாம். இது காலம் சம்பந்தப்பட்ட காரியம். பொருளின் இயல்புத்தன்மை என்பது நிகழ்காலத்தின்
அப்போதைய அந்த நொடிப்பொழுதில் நம்மால் பார்க்கப்படுவதைக் காட்டுகிறது. அந்த கடந்து
போகும் நொடிப்பொழுதுதான் இயல்பு நிலை நேரம். அந்த ஒரு நொடிக்கு முந்தைய எந்த ஒரு காரியமானாலும்
சரி அது இயல்புக்கு மீறின ஒன்றாகும். நம்முடைய பார்வை அந்த துள்ளியமான நொடியிலிருந்து
பயணம் செய்து கடந்த காலத்திற்கு சென்று விடுகிறது.
இமையத்தின் வீணடிக்கப்படாத போலச்(imitate) செய்யும் சொற்கள்
இமையத்தின்
வீணடிக்கப்படாத போலச்(imitate) செய்யும்
சொற்கள்
இமையம் எப்போதும் வார்த்தைகளை எழுத்தாளர்கள் வீணடிக்கிறார்கள்
என்று குறைவு பட்டுக் கொண்டிருப்பார். இதனால் மற்ற எழுத்தாளர்களை திட்டவும் செய்திருக்கிறார்.
ஆரம்பத்தில் இதனைக் கேட்க்கும் போது உள்ளூர குற்ற உணர்வு ஏற்படும். எழுதுவதற்கு தயக்கமும்
ஏற்படும். எழுத்தை வீணடிக்கக் கூடாது என்று இமையம் சொல்லும் போது அவர் எதை அர்த்தப்படுத்தி
பேசினார் என்பது இன்றைக்கு அவருடைய பேட்டியை இந்துவில் படித்த பின்புதான் புரிந்து
கொண்டேன். இமையம் தன் எழுத்திற்கென்று சமீப காலங்களாக ஒரு கோட்ப்பாட்டை முன் நிறுத்திக்
கொண்டிருக்கிறார். இதனை கோட்பாடு என்று சொல்வதற்கு கூட பயமாய் இருக்கிறது. காரணம் கோட்பாடு
என்ற வார்த்தை முழுவதும் இப்போது தவறாக அதுவும் கல்வி புலங்களில் பேராசிரியர்களால்
அறைகுறையாக புரிந்து கொள்ளப்பட்டு போதிக்கப் பட்டு பதிப்பிக்கப்பட்டும் வருகின்றன.
எனினும் இமையம் உருவாக்கும் தன்னுடைய விழுமியங்கள் (இந்த வார்த்தை கூட கொஞ்சம் சிக்கலான
வார்த்தை தான்) முற்றிலும் தன்னுடைய படைப்பு சார்ந்ததாகவே இருக்க செய்கின்றன. படைப்பில்
இருந்து உருவாக்கப்படும் கோட்பாடுகள் தான் மிக திடமானவைகள். அந்த வகையில் ஹென்றி ஜேம்சின்
நாவலின் கலைத் தன்மை என்ற கட்டுரை பொதுவாக நாவல் வடிவம் என்ற பொதுப்படையில்
முன்வைக்கப்படும் கருத்தாக்கங்களாக அல்லாமல் தன்னுடைய படைப்புகளில் இருந்தே முன் வைக்கப்பட்டவைகளாக
இருக்கின்றன.
Wednesday, October 26, 2016
மில்லரின் சாபம்
மில்லரின்
சாபம்
நாராயணனும்
கோபாலனும் அக்கல்விச்சாலைக்குட் புகுந்து மாணாக்கர் தொகுதியையும் ஆரவாரத்தையுங் கண்டு
அதிசயித்துக்கொண்டே பிரதம ஆசிரியராகிய டாக்டர் மில்லர் துரையவர்களிருக்கும் அறையை தேடிச்
சென்றார்கள். அப்புலவர் திலகருக்கு அபொழுது ஐம்பது வயதுக்கு மேலிருக்கலாம். அவர் சரீரத்தின்
உன்னத எழுச்சியையும் நிமிந்த கம்பீர நடையையும், மயிர்செறிந்த களையும், எப்பொழுதும்
பிறர் நன்மையைச் சூழவெழும் நினைவுக்களால் உண்டான வரிகளோடிய விசாலமான நெற்றியையும்,
உதடுகள் பொருந்தி மன உறுதியைக் குடிகொண்டு விளக்கும் தோற்றத்தையும் கண்டவர்கள் நெஞ்சில்,
ஒருவித ஆர்வமும் அச்சமும் வியப்பும் செல்வமும் உண்டாதல் இயல்பே. அவர், ஸ்கோத்லாந்து தேசத்தில் செல்வமும் கண்யமும்
பொருந்திய ஒரு நற்குடும்பத்தில் பிறந்து கல்வியில் சிறந்த பண்டித் தியத்தையடைந்து கீர்த்திப்
பட்டங்கள் பெற்றவராயினும் சுயநயத்தையும் பொருளீட்டலையும் சிறிதும் பாராட்டாதவராய்,
ஔவையார் “திரைகலலோடியுங் கீர்த்தியைத்தேடு” என்ற முது மொழியைக் கைப்பற்றியவர்போல்,
மாதர் வலைச்ச்சிக்கி மனமுறுக்கும் இளம்பிராயத்திலேயே இத்தேசத்திற்கு வந்து, சென்னைக்
கிறிஸ்தவ கலாசானையில் ஓராசிரியராயமர்ந்து, தம் சாமர்த்தியத்தினால் அக்கல்விச்சாலையின்
தலைமை பூண்டு, அது பண்டிதராலும் பாமரராலும் தம் பெயராலேயே வழங்கும் படியான கீர்த்திப்
பிரதாபத்தைக் கொள்ளை கொண்டிருதுமன்றி, செல்வப் பொருளைச் சிறிதும் மதியாது, மாணாக்கர்களின்
சௌகர்யத்தின் பொருட்டும், வித்தியாசாலையின் பொருட்டும் கல்வியை ஏழை மாணாக்கர்களுக்குப்
புகட்டும் பொருட்டும் தம் குடும்பச் சொத்திலிருந்து ஏராளமான திரவியத்தை செலவிட்டும்,
சிற்றின்பசுகத்தையும் சந்தானவிருத்தியையும் கருதாது ஆயுள்மட்டும் பிரமசாரி விரதத்தையே
கைக்கொண்டு, கலைமகளே மணமகளாகவும், தம் அளவிறந்த மாணக்கரே புதல்வராகவும், பரோபகாரமே
உத்தி யோகமாகவும் வாழ்ந்து வந்தார்.
மேற்கூறிய வரிகள் பத்மாவதி சரித்திரம் நாவிலின் வரும் பகுதியாகும்.
கதையின் நாயகன் நாராயணன் தன்னுடைய நண்பன் கோபாலனுடன் சென்னைக்கு மேற்படிப்புக்காக வருகிறான்.
சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரியில் நுழையும் போது அவர்களுக்கு ஏற்படும் மனவெழுச்சிதான்
இந்த வரிகள். இது நடந்தது பதொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில். மாதவையா இக்கல்லூரியிலேயே
பயின்றிருக்கிறார் பாடம் நடத்தியும் இருக்கிறார். அன்றும் சரி இன்றும் சரி மில்லர்
நம்மை திகைக்க வைக்கிற ஒரு ஆளுமை. அன்று ஐம்பது வயதையுடைய மில்லர் மாணவர்கள் மத்தியில்
பெரும் மதிப்பிற்குறியவராக இருந்திருக்கிறார். ஒரு நூற்றாண்டு கழித்து இதனை இன்றும்
பசுமையுடன் நம்மிடம் தருவது நாவல் வகைமை மாத்திரமே. நாவல் தன்னுடைய வடிவத்தில் மாத்திரம்
புதினம் அல்ல அது காலத்திற்கும் தன்னை புதுப்பித்துக் கொண்டிருக்கும் புதினமாக இருக்கிறது.
கதையில் மில்லர் இன்றும் ஐம்பது வயதுடைய அதே கம்பீரமான பேராசிரியதான். மற்ற கலை வடிவங்கள்
செய்யமுடியாததை நாவல் என்கிற கலைவடிவம் செய்து முடித்துவிடுகிறது. நாவலை தொடும் போதெல்லாம்
மில்லர் அன்றிருந்த அதே மிடுக்குடன் நம் கண்முன்னே நடக்க ஆரம்பித்துவிடுகிறார்.
Monday, October 24, 2016
பாப் டிலன்: சில நேரங்களில் சில பரிசுகள்
பாப் டிலன்: சில நேரங்களில் சில பரிசுகள்
பாப் டிலன் நொபேல் பரிசைப் பெற்றது பலதரப்பு சிந்தனையாளர்களிடம்
இருந்து பலவிதமான கருத்துக்களை நம் மத்தியில் எழுப்பியிருக்கின்றன. சர்ச்சை என்று சொல்லாமல்
கருத்துக்கள் என்று சொல்லவே பிரியப்படுகிறேன். பாப் டிலனின் இந்த தருணம் மிக முக்கியமான
தருணம். நமக்கு மூன்று தரப்பினர்களின் விவாதங்கள் முக்கியப்படுகின்றன. இம்மூன்றைத்
தவிர்த்து மற்ற எந்த விவாதமும் சர்ச்சைகளாத்தான் கொள்கிறேன். மூவர்கள் முறையே; நாட்டுப்புறவியல்
வல்லுனர், சமூக சிந்தனையாளர் மற்றும் தேர்ந்த இலக்கியவாதி இலக்கிய விமர்சகர். இவர்களின்
பெயர்கள் எனக்கு மாத்திரமே இரகசியமானவைகள். அதை வெளிப்படுத்தி இப்போது பேசுவது அறமாகாது.
எனினும் இவர்களின் நிலைப்பாடுகளை முன் நிறுத்தி பேசுவது மிகவும் அவசியப்படுகிறது. இவர்கள்
ஐரோப்பியர்களோ அல்லது கீழைத்தேயத்து அறிஞர்களோ அல்ல. நம்முடைய தமிழர்கள் அதுவும் பச்சைத்
தமிழர்கள்.
Saturday, October 22, 2016
வீடுபேறு கிட்ட நண்பர்களை சம்பாதியுங்கள்
வீடுபேறு கிட்ட நண்பர்களை சம்பாதியுங்கள்
இன்று John Galsworthyயின் Strife என்னும் நாடகத்தை பற்றிய அறிமுகம் கிடைத்தது. இந்த பெயர் பரிச்சயமான
பெயர். அதே நேரத்தில் உள்ளூர பயத்தை ஏற்படுத்தும் பெயரும் கூட. சில எழுத்தாளர்களின்
பெயரை கேட்டவுடனே மகிழ்ச்சியான உணர்வு நமக்கு ஏற்படும். சில பெயர்கள் அதிலும் ஆங்கில
இலக்கிய படைப்பாளிகளின் பெயர்கள் மிகவும் பயமுறுத்தக்கூடியவைகள். Galsworthy UGC பரிட்சையின்
பயத்தை ஏற்படுத்தும் பெயர். பெயரைக் கேட்டதுமே இயல்பாக பயம் ஏற்பட்டுவிடும்.
கீழ்கண்டவற்றில் எது Galsworthyன் நாவல் என்ற கேள்வி ஏதோ தண்டனை கைதியிடம் குற்றத்தை
ஒப்புக் கொள்கிறாயா என்ற கேள்வி போன்று ஒரு மரண பயத்தை ஏற்படுத்தும். இன்று அப்படி
இல்லை. புத்தகம் மேஜையின் மீது வைக்கப்பட்டு அதைப்பற்றி பிரஸ்தாபமாக பேசப்பட்டது. Galsworthy
என்ற பெயர் எங்கேயோ கேட்ட பெயர் ஆயிற்றே என்ற கேள்வி மாத்திரம் மண்டையை துளைத்துக்
கொண்டே இருந்தது. அது UGC க்கு சொந்தமான பெயர் அல்லவா. யார் என்று தெறியாவிட்டால் படித்த
முழு படிப்பும் வீண். பதில் கிடைக்காத வரை அற்ப பதர்தான். பதில் கிடைத்துவிட்டால் நம்மை
போன்ற ஸ்காலர் உலகத்திலேயே ஒருவரும் இருக்க மாட்டார்கள்.
Wednesday, October 19, 2016
கதைக்கதையாம் காரணமாம்
கதைக்கதையாம் காரணமாம்
கருத்துக்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மொழி எந்த
அளவிற்கு போதாமைத் தன்மையை கொண்டிருக்கிறது என்பதை விளக்க மொழியியலாளரோ மானுடவியலாளரோ
நமக்கு வேண்டியதில்லை. அன்றாடம் நம்மைச் சுற்றி நடக்கும் உரயாடல்களை கவனித்தாலே போதும்.
அவைகளில் பாதி மொழியற்று இயங்கும் பரிமாற்றங்கள் என்பதை கண்டு பிடித்துவிடுவோம். மொழி
என்பது தன்னுடைய நிலையில் பாதி அளவில் தான் உரையாடலை தொடர அனுமதிக்கும். அதற்கு மேல்
நம்மால் கருத்துக்களை மற்றவர்களுடன் தொடர முடியாமல் போகிறது. மௌனங்களும் திக்கல்களும்
ஒருவழியாக நம்மை காடைசியில் சொல்ல முற்படுவதை சொல்ல வைத்து விடுகின்றன. இதற்கும் மீறி
ஒருவன் சரலமாக மொழியை மிக நீண்ட நேரம் கையாள்பவன் என்றால் நிச்சயம் அவன் அசாதாரண மனிதனாகத்தான்
இருக்க முடியும்.
Thursday, September 8, 2016
புனித வில்லியின் மன்றாட்டு: கோமாளிகளின் கலகக் குரல்
ஸ்காட்லாந்து கவிஞர் ராப்ர்ட் பர்ன்ஸ் ஆங்கில கவிஞர்களிலேயே
மிக முக்கியமான கவிஞர். முதலில் ஆங்கிலக் கவி/எழுத்தாளர் இன்னார் என்பதை வரையறுப்பதே
சற்று குழப்படியான வேலை. அவர் ஆங்கிலத்தில் எழுதியதாலேயே அவரை ஆங்கிலக் கவி என்று வைத்துக்கொள்வோம்.
மற்றபடி அவர் ஸ்காட்லாந்து கவி. இவர் மிகச் சிறந்த கவி என்பதை நிரூபிக்க மற்றொரு ஆங்கிலேயக் கவி மேத்திவ் அர்னால்ட் ”Study of
Poetry”ல் Touch Stone முறையை பயன்படுத்துவார். எல்லாருடைய கவிதைகளையும் இந்த முறைமையில்
பரிசீலித்து கடைசியில் ராபர்ட் பர்ன்ஸே சிறந்த கவி என்று நிரூபிப்பார். இந்த விமர்சன
கட்டுரையைப் பேராசிரியர் ரெஜானி 2008ம் ஆண்டு எங்களுக்குப் பாடமாக நடத்தினார். அவர்
நடத்திய ஒவ்வொரு வரியும் அப்படியே மனதில் பதிந்துவிட்டது. மறுபரிசீலனை செய்யும் வண்ணமாக
ரமணன் சார் பர்ன்ஸின் புனித வில்லியின் மன்றாட்டு என்ற கவிதையைத் தற்போதைய மாணவர்களுக்குப்
பாடம் எடுக்க ஆரம்பித்தார். ரெஜானி எப்போதும் மிகப் பெரிய அறிவுத்தொகுதியில் இருந்து
நம்பிக்கையே இல்லாமல் ஒரு கட்டுரையை அல்லது
கவிதையை நடத்த பெரும்பாடு பட்டு சாதித்துவிடுவார். ரமணன் சார் அதற்கு மாறாக ஒரு கட்டுரை
அல்லது கவிதைக்காகக் குறைந்தது நாற்பது ஐம்பது கட்டுரைகளையாவது பரிசீலித்துவிட்ட பிறகுதான்
அந்தக் கவிதையை வகுப்பறையில் நடத்த முன்வருவார். இதில் மாணவன் திறமைசாலியாக இருந்தால்
பல கட்டுரைகளை எழுதுவதற்கான தரவுகளை இவர்களிடம் இருந்து திருடிவிடலாம். அது மாணவர்களின்
சாமர்த்தியம்.
Monday, August 29, 2016
வெற்றிடம் விழுங்கும் இராட்சத வார்த்தை
வெற்றிடம் விழுங்கும் இராட்சத வார்த்தை
எழுத்தாளனக்கு தேவையானதெல்லாம் தான் சுதந்திரமாக எழுதுவதற்கான
ஒரு பத்தி அவ்வளவுதான். அதில் அவன் நினைப்பது அனைத்தும் எழுதப்படுகிறது. அந்தப் பத்தி
எந்த ஒரு கட்டுப்பாட்டையும் எழுத்தாளன் மீது விதிக்காது. தன் சுதந்திரம் முழுவதும்
அந்த குறிப்பிட்ட பத்திக்குள் கட்டற்று செயல்பட ஆரம்பிக்கிறது. பொதுவாக வார மற்றும்
மாத பத்திரிக்கைகளில் ஒதுக்கப்படும் பத்திகள் சிறுகதைகளுக்காகவும், கட்டுரைகளுக்காகவும்,
கவிதைகளுக்காகவும், மற்றும் மதிப்புரைகளுக்காகவும் இருக்கின்றன. அந்த பத்திகள் சுதந்திர
சிந்தனைக்கான அடக்குமுறையாகும். இவைகள் எழுத்தாளனை இப்படித்தான் எழுத வேண்டும் என்று
ஒரு வடிவத்திற்குள் கட்டுப்படுத்துகின்றன. அவனை ஒரு வகையான எழுத்தின் கட்டுப்பாட்டுக்குள்
அடைத்து விடுகின்றன. அதற்காக இவைகள் கூடாது என்றல்ல. இவைகள் கட்டாயமானவைகள். சுதந்திரமானவைகள்
அல்ல. எனினும் படைப்பு என்பதை இந்த குறிப்பிட்ட வகைமையின் வடிவத்தில் தான் எழுத வேண்டும்
என்று வற்புறுத்த முடியாது.
ஒரு பக்கத்தில் வடிவங்களுக்காக படைப்புகள் உருப்பெறுகின்றன.
மற்றொரு பக்கத்தில் ஒரு குறிப்பிட்ட வடிவத்தை நினைத்து எழுத்து அந்த வடிவத்தை நோக்கி
பயணிக்கிறது. கடைசியில் அது அந்த முன் தீர்மாணிக்கப்பட்ட வடிவமாகிறது. முன் தீர்மாணிக்கப்பட்ட
வடிவமும் சரி அல்லது எழுத்து தான் அடையப் போகும் வடிவமும் சரி அவைகள் எழுத்தாளனாள்
தீர்மாணிக்கப்படுவது அல்ல. எழுத்து ஒரு கட்டுப்பாட்டில் தன்னை முடக்கிக் கொள்கிறது.
உண்மையில் வார்த்தைக்கு எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. வார்த்தை கோருவதெல்லாம் ஒரு
சுதந்திரமான வெற்றிடம். அங்கு சுதந்திர வெற்றிடம் அந்த வார்த்தை இப்படித்தான் இருக்க
வேண்டும் என்று நிர்பந்திக்கக் கூடாது. வார்த்தை தன்னளவில் கட்டற்ற நிலையில் ஒரு மாபெறும்
பிரபஞ்சத்தை தன்னுள் வைத்திருக்கிறது. அது கோருவது ஒன்று மாத்திரமே ஒரு வெற்றிடம் அவ்வளவுதான்.
அந்த வெற்றிடத்தை நிறப்ப அந்த வார்த்தை தன்னை எவ்வளவு வேண்டுமோ அவ்வளவுக்கும் விஸ்தரித்துக்
கொள்கிறது.
எழுத்தாளன் தான் சாதிக்க தேவையானது ஒரு பிரம்மாண்டத்தை உருவாக்க
ஒரு வெற்றிடம் மாத்திரமே. ஒரு சிறு அளவிலான இடத்தை ஒதுக்கி அதில் பிரம்மாண்டம் என்று
ஒன்றை கட்டமைக்க சொன்னால் அதில் அனைத்தும் கட்டுப்படுத்தப்பட்டுவிடும். பத்திரிக்கைகளில்
இது போன்ற ஒரு வெற்றிடம் அவசியப்படுகிறது அதன் பெயர் என்னவென்று அவ்வளவு எளிதில் வவரையறுத்து
சொல்லிவிடமுடியாது. அது கொடுக்கும் இடம் ஒரு நூறு வார்த்தைகளுக்கான இடமாகக் கூட இருக்கட்டும்
ஆனால் அது வெற்றிடமாக இருக்கட்டும். அந்த வெற்றிடம் ஒரு ஜனநாயகத்தின் வெற்றிடமாக இருக்கட்டும்.
எழுதப்படும் நூறு வார்த்தைகள் சுதந்திரத்தின் வார்த்தைகளாக இருக்கட்டும். அது சட்டத்திற்கு
கீழ்பட்டதாக இருக்க கூடாது. சட்டபுத்தகம் அதன் எழுத்து அளவில் கணிக்க முடியாதவை அங்கு
வார்த்தைக்கு ஜனநாயகம் கிடையாது. அந்த வார்த்தை சட்ட வரையறைக்குள் மண்டியிட்டு கிடக்கும்
அடிமை அவ்வளவுதான். ஆனால் இந்த வார்த்தை இயங்கும் மிகச் சிறிய வெற்றிடம் செயல்பாட்டில்
இப்பிரபஞ்சத்தைக் காட்டிலும் மிகப் பெரிய உலகத்தை தன்னுள் வைத்திருக்கிறது.
தாஸ்தாவஸ்கிக்கு அப்படிப்பட்ட ஒரு வெற்றிடம் தரப்பட்டது.
அதனை எதோ ஒன்றென்று பெயரிட்டு அழைத்தாக வேண்டுமே. எனவே அது எழுத்தாளனின் நாட்குறிப்பு
என்று பெயர் வைத்து விட்டார்கள். அந்த சுதந்திர வெளிதான் அவரது வார்த்தைகள் வெறும்
எழுத்து நிலையில் இருந்து படைப்பு நிலையை எட்டியது. அந்த வெட்டவெளிதான் இரண்டு நிலைகளிலான
வார்த்தையை தீர்மானிக்கிறது. ஒரு நிலையில் அது வெறுமனே ஏதோ ஒன்றை குறிப்பிடப் பயன்படும்
வார்த்தை. மற்றொரு நிலை கவிதையின் நிலை. அது ஒரு சொல்லாக இருக்கட்டும் வாக்கியமாக இருக்கட்டும்
- அது கவிதை. அதை சாத்தியமாக்கியது அந்த வெற்றிடம். தனக்கு அந்த பத்திரிக்கையில் ஆசிரியர்
பணி கிடைத்த உடன் தான் என்னவோ ஒரு மாபெரும் சீன சாம்சாஜ்யத்திற்கே அரசனானது போன்று
பெருமைப் பட்டுக் கொண்டார். காரணம் தனக்கு கிடைத்திருக்கிற அந்த சுதந்திர வெளி அதில்
அவர் எழுத்தை முழுவதும் கட்டுப்பாடின்றி உலாவவிட்டார். அந்த இடம் உருவாக்கியதுதான்
இன்றைய நவீன பேரிலக்கியம். அது வடிவமற்றது. எனினும் அதை வார்த்தை என்றளவில் கவிதை என்று
வறையறுத்து விட முடியும். அதில் அவர் ஒரு வடிவத்தை மனதில் கொண்டு படைப்பை உருவாக்கவில்லை
மாறாக வார்த்தை தன் வடிவத்தை உருவாக்கி கொண்டது. வெண்ணிற இரவுகள் போன்ற கதைகள் இந்த
சுதந்திர வெளியில் தான் தன் கவிதை என்ற வடிவத்தை உருவாக்கிக் கொண்டன.
இந்த எழுத்தாளனின் நாட்குறிப்பு பத்தி மாத்திரமே வார்த்தையை
அதன் போக்கில் தன் வடிவத்தை தீர்மாணித்துக் கொள்ள அனுமதி அளிக்கிறது. வார்த்தைதான்
அதன் வடிவத்தை தீர்மாணிக்க வேண்டும். அதற்காக அந்த நாட்குறிப்பு பகுதியில் அவன் செய்ய
வேண்டியதெல்லாம் அந்தப் பகுதியில் தன் விருப்பு வெறுப்புகளை வார்தைப்படுத்தவேண்டும்.
திடீரென்று அது உணர்வுகளின் வெளிப்பாட்டிற்கும் மீறி உண்ணதமாக உருவெடுக்கும். அந்தத்
தருணம் எப்போது நடைபெறும் என்பது எழுத்தாளனுக்கும் தெறியாது எழுத்துக்கும் தெரியாது.
ஆனால் வார்த்தையில் காத்திருக்க வேண்டும். அந்த காத்திருப்பிற்கான இடத்தை பத்திரிக்கையின்
மற்ற பத்திகள் அனுமதிக்காது. கூர்க்காவை போன்று துரத்தி அடித்து விடும். வேகமாக வேலையை
செய்து விட்டு நேரம் முடிந்தவுடன் கடையைக் கட்ட வேண்டும்.
Sunday, August 14, 2016
ஓலைச்சுவடியில் என்ன இருக்கிறது?
ஓலைச்சுவடியில் என்ன
இருக்கிறது?
தமிழ்த்துரை மாணவர்கள் எப்போதும் எளிமையாக காட்சியளிப்பவர்கள். அட, இவர்களிடம் என்ன இருக்க போகிறது என்ற எண்ணம் எப்போதும் இருந்துகொண்டிருக்கும். சற்று அருகில் சென்று விவாதிக்கும் போதுதான் தெரியும் ஆங்கிலத்துரை மாணவர்கள் கற்க வேண்டியது அதிகம் அவர்களிடம் இருக்கிறது என்பது. ஆனால் இடைவெளி எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். இந்த இடைவெளி உடையும் போது கிடைக்கும் ஆதாயம் இருசாராருக்கும் அதிகம். தமிழ்துரை மாணவர்கள் கட்டுரைகளை படிக்கும் போது அதிகம் கோட்பாடுகளை அள்ளி வீச மாட்டார்கள். தரவுகளை சேகரித்து நேர்த்தியான விதத்தில் தருவதில் கைத்தேர்ந்தவர்கள். ஆனால் ஆங்கிலத்துரை மாணவர்கள் பீட்டர் இங்லீஷ்சை வைத்துக் கொண்டு ஒரு கருத்தை மாத்திமே வைத்து கொண்டு வீடு கட்டிவிடுவார்கள். இது மொழி சார்ந்த பிரச்சனையாக இருக்கலாம். ஆனாலும் அவர்களிடம் கற்க வேண்டியது அதிகம்.
Subscribe to:
Posts (Atom)
வாசிக்கும் போதே இந்த தன் வரலாற்று நூலின் சில பகுதிகளைப் பகிராமல் இருக்க முடியவில்லை. பௌத்த வேட்கையின் பயணத்தில் கொஸாம்பி எடுத்து வைத்த...
-
வரும் சுதந்திர தின விழாவை முன்னிட்டு பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகளை இந்த வாரத்திலேயே நடத்தி முடித்தாக வேண்டியிருந்தது . நேற்று தமிழ்த்த...
-
கீசு கீசு என்று எங்கும் ஆனைச் சாத்தான் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே கரிச்சான் குருவிகளை அதிகம் என் ஊரில் ப...