தெரு முனையில்தான் மருந்து கடை . இந்த மிகக் குறுகிய தூரத்தை நடந்து சென்று வருவதற்குள் எத்தனை அதிசயங்கள் கண் முன் நடக்கின்றன . இது சென்னைதானா ! சாலை வெறிச்சோடிக் கிடக்கிறது . மருந்து வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வரும் போது தேன் சிட்டுக்கள் சத்தம் எழுப்பிக் கொண்டிருக்கின்றன . சொஞ்சம் கவனித்து பார்த்தால் சிறிய மரங்களில் ஒன்று இரண்டு என ஆங்காங்கே தேன் சிட்டுக்களை காண முடிகிறது . தனித்தனியாக ஒவ்வொரு பறவையின் சத்தத்தையும் தனித்து கேட்கமுடிகிறது . கிளியின் சத்தமும் கேட்கிறது . தூரத்தில் குயிலின் ஓசை . கவித்துவமாக இருக்கட்டுமே என்று சொல்லவில்லை . உண்மை . இவர்கள் எல்லாம் இத்தனை நாட்கள் எங்கிருந்தார்கள் . ஏதோ காக்கைகள் மாத்திரமே நிரந்தர சென்னைவாசிகள் போன்று முன்பெல்லாம் நகரத்தை வட்டம் வருவார்கள் . அத்தனை காக்கைகள் இருந்தும் இப்போது அவைகளை பொருட்படுத்த முடியவில்லை . சிங்காரமான தேன்சிட்டும் , கண்ணுக்கு தெரியாமல் கூவிக்கொண்டிருக்கும் குயிலும் எண்ணிக்கையில் குறைவுதான் . விரல் விட்டு எண்ணிவிடலாம் . இப்போது தெருவில் அவர்களே...