பாலச்சந்திரனின் இறுதியுணவு: பாவக்கனி ருசித்த கலகக் குரல் இன்று நாம் குறிப்பிடும் கவிதை என்ற சொல் வெறுமனே ஒரு இலக்கிய வகைமையை குறிப்பிடுகிறதா அல்லது வகைமைகளுக்கு மீறி இலக்கியம் என்ற பொது தளத்தில் இயங்குகிறதா என்ற கேள்வி நவீனகவிதைகளை வாசிக்கும் போது ஏற்படுகிறது. இச்சொல் உரை நடை அல்லது பாடல் என்ற வரைமுறையை மீறி ஒரு பிரதிக்குள் இருக்கும் அழகியலையே குறிப்பிடுகிறது. ரஷ்ய இலக்கிய மேதை தாஸ்தாவஸ்கி தன் எழுத்துக்கள் உரைநடையாயினும் பீட்டர்ஸ் பெர்க் கவிதைகள் என்றே அழைக்கிறார் . தன் கரமசாவ் சகோதரர்கள் நாவலில் வரும் ஒரு பகுதியான கிராண்டு இன்க்விசிட்டரையும் கவிதை என்று தான் அழைக்கிறார். இங்கு மொழி வடிவம் பற்றிய வரையறைகளைத் தாண்டி பிரதியின் அழகியலை காண முனைகிறோம். பிரதிக்குள் கலைஞன் தான் அடைய முயற்ச்சிக்கும் அழகியலே அதனை கவிதை என அழைக்க நம்மைத் தூண்டுகிறது.