ஒவியங்களைப் புரிந்து கொள்வதற்கு அதில் நிபுணத்துவம் பெற்றவர்கள் அவசியப்படுகிறார்கள். நாம் சில ஓவியங்களை வெறிக்க வெறிக்க பார்த்துக் கொண்டே இருப்போம். ஒன்றும் விளங்காது. ஒருவர் அதன் அழகியல் தன்மையை விவரிக்கும் போது இதை ஏன் நாம் இது வரை பார்க்கத்தவறிவிட்டோம் என்று ஆச்சரியத்தில் ஆழ்ந்துவிடுவோம். ஓவியத்துக்கும் நமக்கும் இடையில் இருக்கும் அந்த நபர் நம் பார்வையை முற்றிலும் நம்முடையது அல்லாத ஒரு பார்வையாக மாற்றியமைக்கிறார். முன்பு இருந்த பார்வை அவர் காட்டும் அந்தத் தருணத்தில் இருப்பதில்லை. முன்பு பார்த்த பார்வையில் வெறுமனே காட்சி மாத்திரம் தான் இருக்கிறது அதில் அந்த ஓவியம் காட்டும் தரிசனம் முற்றிலுமாகக் காணாமல் போகிறது.