Saturday, October 22, 2016

வீடுபேறு கிட்ட நண்பர்களை சம்பாதியுங்கள்




வீடுபேறு கிட்ட நண்பர்களை சம்பாதியுங்கள்
இன்று John Galsworthyயின் Strife என்னும் நாடகத்தை பற்றிய அறிமுகம் கிடைத்தது. இந்த பெயர் பரிச்சயமான பெயர். அதே நேரத்தில் உள்ளூர பயத்தை ஏற்படுத்தும் பெயரும் கூட. சில எழுத்தாளர்களின் பெயரை கேட்டவுடனே மகிழ்ச்சியான உணர்வு நமக்கு ஏற்படும். சில பெயர்கள் அதிலும் ஆங்கில இலக்கிய படைப்பாளிகளின் பெயர்கள் மிகவும் பயமுறுத்தக்கூடியவைகள். Galsworthy UGC பரிட்சையின் பயத்தை ஏற்படுத்தும் பெயர். பெயரைக் கேட்டதுமே இயல்பாக பயம் ஏற்பட்டுவிடும். கீழ்கண்டவற்றில் எது Galsworthyன் நாவல் என்ற கேள்வி ஏதோ தண்டனை கைதியிடம் குற்றத்தை ஒப்புக் கொள்கிறாயா என்ற கேள்வி போன்று ஒரு மரண பயத்தை ஏற்படுத்தும். இன்று அப்படி இல்லை. புத்தகம் மேஜையின் மீது வைக்கப்பட்டு அதைப்பற்றி பிரஸ்தாபமாக பேசப்பட்டது. Galsworthy என்ற பெயர் எங்கேயோ கேட்ட பெயர் ஆயிற்றே என்ற கேள்வி மாத்திரம் மண்டையை துளைத்துக் கொண்டே இருந்தது. அது UGC க்கு சொந்தமான பெயர் அல்லவா. யார் என்று தெறியாவிட்டால் படித்த முழு படிப்பும் வீண். பதில் கிடைக்காத வரை அற்ப பதர்தான். பதில் கிடைத்துவிட்டால் நம்மை போன்ற ஸ்காலர் உலகத்திலேயே ஒருவரும் இருக்க மாட்டார்கள்.
                கதை இதுதான். ஒரு கம்பெனியில் தொழிலாளர்களுக்கும் மேனஜருக்கும் பிரச்சனை. தொழிலாளிகள் தங்களுடைய அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தருமாறு கேட்கிறார்கள். மேனேஜரோ ஒரு கோரிக்கையைக் கூட நிறைவேற்ற முடியாது என்று பிடிவாதமாக இருக்கிறான். நீண்ட நாள் வேளை நிறுத்தம். பசி, பட்டினி, சாவு என்று வேளை நிறுத்தம் தொழிலாளிகளின் மத்தியில் இன்னல்களை ஏற்படுத்திவிடுகிறது. இவைகள் அனைத்திற்குமான தீர்வு கண்டடைந்தாக வேண்டும். ஆனால் மேனேஜர் உடன்படுவதாக இல்லை. இரண்டு தரப்பினரும் முரண்பட்டு நிற்கின்றனர். ஒரு பக்கத்தில் முதலாளிக்கும் பாதிப்பு மற்றொரு பக்கத்தில் தொழிலாளிகளின் உயிரே பணயம் வைக்கப்படுகிறது.
                இதில் இருக்கும் மிகப் பெரிய பிரச்சனை இரண்டு தரப்புக்காரகளும் நேரடியாக சந்தித்ததே இல்லை. இவர்கள் இருவருக்கும் மத்தியில் இருப்பது மேனேஜரும் தொழிற்சங்கத் தலைவருமே. பிரச்சனை இவர்களிடையே இருக்கும் மனக்கசப்பு மற்றும் பெரியவன் சிறியவன் என்ற வர்க்க வேறுபாட்டு. இவர்களே முக்கிய நபர்களான முதலாளியையும் தொழிலாளியையும் பிரித்து வைத்திருந்தனர். இவர்கள் இரண்டு சாராரும் சந்தித்து கோள்வது என்பதும் இயலாத காரியம். முடிவாக இருவரும் சந்தித்தாக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுவிடுகிறது. முதலாளி மேனஜைரை வேலை நீக்கம் செய்கிறார். தொழிலாளிகள் யூனியன் தலைவரை அகற்றி விடுகிறார்கள். இரண்டு தரப்பினரும் சமரசமடைகிறார்கள்.
                கதையைக் கேட்டவுடன் திடீர் என்று லைட் அடிக்க ஆரம்பித்தது. அவரேதான் இவர். கண்டுபிடிப்பு தரும் போதை இருக்கிறதே. ‘’ Virginia Woolf தன்னுடைய Modern Fiction கட்டுரையில் தன்னுடைய சம கால மூன்று நாவலாசிரியர்களை கிழி கிழி என்று கிழித்திருப்பார். அதில் Galsworthyயும் ஒருவர். அந்த அம்மாவுக்கும் இந்த எழுத்தாளர் மெட்டிரியலிஸ்டாம். இவரது நாவல்களில் எந்த கலையம்சமும் கிடையாதாம். அவரை பொருத்த வரை stream of consciousness பானியில் எழுதினால் தான் கலையாம்.
இவரைத்தானே Virginia Woolf மெட்டிரியலிஸ்ட் என்று அழைத்திருப்பார் என்றேன். ”புத்தக கவரைப் பார்” என்ற கட்டளை பிறப்பிக்கப்பட்டது. ஆச்சரியப்படும் விதத்தில் புத்தகத்திற்கு ’டைல்ஸ்களால்’ அலங்கரிக்கப்பட்ட வீட்டையும் ஒரு பெட்டியில் டைஸ்கள் அடுக்கி வைத்திருக்கும் படத்தையும் கொண்ட செய்திதாள் புத்தக அட்டையாக போடடிப்பட்டிருந்தது. மிகவும் ஆச்சரியமாகிவிட்டது. சில நேரங்களில் உரையாடல்கள் இப்படி மிகவும் பயனுள்ளவைகளாக மாறிவிடுகின்றன. Galsworthy மெட்டிரியலிஸ்ட்டுதான். எந்த விதத்தில் அவர் மெட்டிரியலிஸ்ட் என்பதுதான் முக்கியமான கேள்வி. சமுகத்தின் இப்படிப்பட்ட பிரச்சனைகளை கதைகளில் முன்நிறுத்தாமல் ஒரு தெருவை ஒரு நாள் கடந்த அனுபவத்தை அதுவும் ஹோமரின் காவித்திற்கு ஒப்பிட்டு ஒரு நாவல் எழுதியது Virginia Woolfன் பார்வையில் கலையாம். அதுவே சமுதாயத்தின் அன்றைய பிரச்சனைகளை பேசிய Galsworthy மெட்டிரியலிஸ்டாம். Virginia Woolfன் கட்டுரையை வாசித்தால் வாசிப்பில் நாமே அந்த மூன்று நாவல் ஆசிரியர்களாக உருமாறி திட்டு வாங்குவது போலிருக்கும். உண்மையில் யார் மெட்டிரியலிஸ்ட் என்பது தான் இப்போது கேள்வி.
                இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க மேற்கூறிய கதை வேறு ஒரு உவமைக் கதையை நினைவூட்டியது. அந்தக் கதையில் இதே போன்றுதான் தொழிலாளர்களுக்கும் எஜமானுக்கும் மத்தியில் உக்கிராணக்காரன் என்று ஒருவன் இருப்பான். அவன்தான் வீட்டின் எல்லா நிர்வாகத்தையும் பராமரிக்கிறவன். உக்கிராணக்காரன் தொழிலாளியும் கிடையாது முதலாளியும் கிடையாது. எனினும் மிக மறியாதைக்குறிய பொறுப்பு அவனுடைய உக்கிராணக்காரன் பொறுப்பு. உக்கிராணக்காரன் தன் பொறுப்பை தவறாக பயன்படுத்தி வேளைக்காரர்களை அடிக்கவும் உதைக்கவும் ஆரம்பித்துவிடுவான். செய்தி எப்படியோ எஜமானனை எட்டிவிடும். அவர் அவனை உக்கிராணக்கார உத்தியோகத்தில் இருந்து நீக்கிவிட முடிவு செய்துவிடுவார். தன் எஜமான் தன்னை வேலையில் இருந்து நிச்சயம் நீக்கிவிடுவார் என்பது தெரிந்தவுடன். அவனுக்கு ஒரு யோசனை வரும். அதாவது தான் வேலையில் இருந்து நீக்கப்பட்டால் நிலத்தை உழவும் தனக்கு சத்து கிடையாது. இத்தனை ஆண்டுகள் மிக மரியாதையோடு வாழ்ந்தாயிற்று. பிச்சையும் எடுக்கம் முடியாது. இப்போது வேலையில் இருந்து நீக்கப்பட்டால் என்ன செய்வது என்பதுதான் அவனுடைய பயம். அதற்கு அவன் ஒரு உபாயம் கண்டுபிடிப்பான்.
வேலைக்காரன் ஒருவனை அழைத்து உன்னுடைய கடன் பாக்கிய எவ்வளவு என்று கேட்பான். அதில் பாதியாக குறைத்து கணக்கை இவ்வளவு என்று எழுது என்பான். இதே போன்று எல்லா வேலைக்காரர்களுடைய கடன்களை பாதியாக குறைத்துவிடுவான். எல்லருக்கும் அவன்மீது நன்மதிப்பு ஏற்பட்டுவிடும். இப்படி செய்வதினால் வேலையில் இருந்து தான் நீக்கப்படும் போது கடன் குறைக்கப்பட்டவர்கள் தக்களுடைய வீட்டில் அடைக்கலம் கொடுப்பார்கள் என்பது அவனுடைய எண்ணம். இதை பற்றி கேள்வி பட்ட எஜமான் அவனுடைய புத்தி சாதூர்யத்தைக் கண்டு மெச்சிக் கொள்வார். இந்தக் கதையின் moral என்னவென்றால் இந்த உலகத்தின் மக்களுடைய நட்பை சம்பாதிப்பதற்கே இவ்வளவு நன்மை செய்ய வேண்டுமானால். வீடுபேறு அடைய எவ்வளவு நன்மை செய்து நண்பர்களை சம்பதிக்க வேண்டும் என்பதுதான்.

                வாசிப்பிற்கே சாவால் விடும் Virginia Woolfன் கதைகள் எங்கெ. அன்றாட பிரச்சனைகளை முன்நிறுத்தி பேசும் அதுவும் வீடுபேரை பற்றி பேசும் கதையை நினைவு படுத்தும் Galsworthyயின் கதை எங்கே.   

No comments:

Post a Comment

    வாசிக்கும் போதே இந்த தன் வரலாற்று நூலின் சில பகுதிகளைப் பகிராமல் இருக்க முடியவில்லை. பௌத்த வேட்கையின் பயணத்தில் கொஸாம்பி எடுத்து வைத்த...