போரும் வாழ்வும் நாவலில் ஓரிடத்தில் டால்ஸ்டாய் நெப்போலியனைப் பற்றி இவ்வாறு சொல்லுவார் “ அவன் உள்ளுக்குள் ஒரு இத்தாலியன், வெளிப்பாவனையில் ஒரு பெரென்சுக்காரன்” என்று. அத்தனையும் நடிப்பு. உண்மைத்தன்மை என்று எதுவும் அவனிடத்தில் கிடையாது. அது இருக்கட்டும். அந்த நெப்போலியனைப் பற்றி இப்போது நமக்கு என்ன கவலை என்று கேள்வி எழலாம். இப்போது நூறு ஆண்டுகளுக்கு முன் சர்வாதிகாரியாக வாழ்ந்த நெப்போலியனைப் பற்றி யார் கவலைப் படப்போகிறார்கள். ஹிட்லர் என்றால் கூடப் பரவாயில்லை. நமக்கு இங்கு முக்கியமாகப்படுவது டால்ஸ்டாய் காட்டும் நெப்போலியன்தான். நாவலில் நாவலாசிரியன் காட்டும் ஒரு மனிதன் நிஜத்தைக் காட்டிலும் தத்ரூபமானவன். நெப்போலியனை அநேகர் புகழ்ந்துதான் கேள்விப்பட்டிருக்கிறோம். அனால் போரும் வாழ்வும் மாத்திரம்தான் நெப்போலியன் என்றால் யார் என்று மிக அருகில் நம்மை அழைத்துக் கொண்டு போய்க் காண்பிக்கிறது. நாம் கேட்டறிந்த நெப்போலியன் வரலாறு கட்டமைத்த நெப்போலியன். அதில் தகவல்கள் மாத்திரம் அதிகமே தவிர உண்மைக்கு எந்த இடமும் கிடையாது.