வீட்டின் பின்புறம் காட்டுவா மரம் ஒன்று இருக்கிறது. பசுமையான இலைகள் மூடி தழைத்து நிற்கிறது. மொட்டை மாடிக்கு சென்று சிறிது நேரம் தனிமையில் இருக்கும் போதெல்லாம் அந்த மரத்தில் வந்தடங்கும் பறவைகளை உற்று நோக்குவது வாடிக்கை. சில நேரங்களில் பச்சைக் கிளிகள் ஒன்று இரண்டு என வந்து அமர்ந்திருக்கும். தண்ணீரில் சிறு ஓடு ஒன்றை விட்டெறிந்தால் எப்படி தத்தி தத்தி குதித்து செல்லுமோ அது போன்று சிறு கிளைகளில் சிட்டு குருவிகள் ஓர் இடத்தில் உட்காராமல் சதா குதித்துக் கொண்டே இருக்கும். காகங்கள் இல்லாமல் அந்த மரம் ஓய்ந்திருப்பதில்லை.