ஜேம்ஸ் ஜாய்சுக்கு தன் நாட்டைப் பற்றின தேசிய காவியம் ஒன்றை எழுத வேண்டும் என்ற விருப்பம் இருந்தது போலும். அதனை யுலிசஸ் என்ற நாவலாக எழுதிவிட்டார். காவியத்துக்கும் மண்ணுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. காவியம் மண்ணைப் பற்றி பேசும் போது அம் மண்ணும் மக்களும் காலத்தால் மறக்கப்பட்டாலும் காவியத்தால் ஆயிரம் ஆண்டுகள் கழிந்தாலும் நினைவில் நிலை நிறுத்தப்படுகிறார்கள். இது காவியத்தில் மொழியின் சாதனை. காவியம் பாடாத மொழி தன் மண்ணை தனக்கு சொந்தம் பாராட்டிக் கொள்ள முடியாது. சட்ட ரீதியாக மண் சொந்தமாக இல்லாமல் இருக்கலாம். உணர்வு ரீதியில் உரிமையின் அடிப்படையில் மண் காவியத்தால் சொந்தமாக்கப்படுகிறது. மொழி தன் உரிமையை மண்ணின் மீது நிலை நாட்டிக் கொள்ள இருக்கும் ஒரே வாய்ப்பு காவியம் படைப்பதுதான். ஜாய்சுக்கு அந்த தேவை இருந்திருக்கிறது. அவர் ஒரு காவியம் இயற்றினால் போதும் அயர்லாந்து அவருக்கு சொந்தமானதாக ஆகி விடும். எல்லைக் கோடு இட்டு நிலத்தை ஆட்சி செய்பவன் உண்மையான அரசன் அன்று. வேண்டுமானால் அவன் வரி வசூலித்துக் கொள்ளலாம். மண் அவனுக்கு சொந்தம் கிடையாது. ஜாய்சுக்கு மண்ணை ஆளவேண்...