புனித வில்லியின் மன்றாட்டு: கோமாளிகளின் கலகக் குரல் ஸ்காட்லாந்து கவிஞர் ராப்ர்ட் பர்ன்ஸ் ஆங்கில கவிஞர்களிலேயே மிக முக்கியமான கவிஞர். முதலில் ஆங்கிலக் கவி/எழுத்தாளர் இன்னார் என்பதை வரையறுப்பதே சற்று குழப்படியான வேலை. அவர் ஆங்கிலத்தில் எழுதியதாலேயே அவரை ஆங்கிலக் கவி என்று வைத்துக்கொள்வோம். மற்றபடி அவர் ஸ்காட்லாந்து கவி. இவர் மிகச் சிறந்த கவி என்பதை நிரூபிக்க மற்றொரு ஆங்கி லேயக் கவி மேத்திவ் அர்னால்ட் ”Study of Poetry”ல் Touch Stone முறையை பயன்படுத்துவார். எல்லாருடைய கவிதைகளையும் இந்த முறைமையில் பரிசீலித்து கடைசியில் ராபர்ட் பர்ன்ஸே சிறந்த கவி என்று நிரூபிப்பார். இந்த விமர்சன கட்டுரையைப் பேராசிரியர் ரெஜானி 2008ம் ஆண்டு எங்களுக்குப் பாடமாக நடத்தினார். அவர் நடத்திய ஒவ்வொரு வரியும் அப்படியே மனதில் பதிந்துவிட்டது. மறுபரிசீலனை செய்யும் வண்ணமாக ரமணன் சார் பர்ன்ஸின் புனித வில்லியின் மன்றாட்டு என்ற கவிதையைத் தற்போதைய மாணவர்களுக்குப் பாடம் எடுக்க ஆரம்பித்தார். ரெஜானி எப்போதும் மிகப் பெரிய அறிவுத்தொகுதியில் இருந்து நம்பிக்கையே இல்லாமல் ஒரு கட்டுரையை அல்லது கவிதையை நடத்த பெரும...