Skip to main content

டான் குயிக்ஸாட்டும் வாசிப்பனுபவமும்: பகுத்தறிவின் கண்கள் திறக்கப்படும் தருணம்


சில புத்தகங்களை நாம் மாத்திரமே வாசிக்க வேண்டும் போல் இருக்கும். அவைகளை மற்றவர்கள் யாரேனும் வாசிக்க நேர்ந்தால் பொறாமைத் தீ அவர்கள் மீது பற்றி எரியும். சில புத்தகங்களை அவ்வளவு சீக்கிரத்தில் யாராலும் வாசித்து விட முடியாது. அப்படிப்பட்ட புத்தகக்களை வேறொருவர் வாசிக்க நேர்ந்தால் அவர்மீது தோழமை உணர்வு அதிகமாகிவிடும். இவைகளுக்கும் மீறி சில புத்தகங்கள் உள்ளன. அவைகள் தனிப்பட்ட வாசிப்பனுபவத்திற்கோ பெருமிதத்தின் வாசிப்பனுபத்திற்கோ ஆன புத்தகங்கள் அல்ல. வாசித்து முடித்தவுடன் அதனை இந்த உலகமே வாசிக்க வேண்டும் என்ற ஒரு புனிதமான எண்ணம் நமக்குள் உருவாகி விடும். அதனை வாசிக்கும் படி இந்த முழு உலகத்திற்கும் பரிந்துரை செய்வோம்.

முதற்கூறிய புத்தகங்கள் வரிசையில் பிரதானமாக தாஸ்தாவஸ்கியை நான் என் தனிப்பட்ட வாசிப்பனுபவத்தில் குறிப்பிடுவேன். யாரேனும் அவரை வாசித்து விட்டேன் என்று சொன்னால் அந்த நபரை மன்னிக்கவே மாட்டேன். தாஸ்தாவஸ்கியை வாசிக்க முடியவில்லை என்று சொல்லக் கேட்கும் போது ஒரு மேதமையின் உணர்வு நம்மில் ”நான் தானடா வாசிப்பு சக்ரவர்த்தி” என உளப்பூர்வமான பூரிப்பை நமக்குள் ஏற்படுத்தும். எனினும் அதனை வெளியில் சொல்ல மாட்டோம். அது நம்முடைய ஈகொவை அதிகம் வலுப்பெற செய்து நம்முடைய தனித்துவத்தைக் கட்டிக் காக்கும். டால்ஸ்டாயைப் பொருத்தவரை அவர் அனைவருக்குமானவர் எனினும் எளிதில் அனைவரும் அவரிடத்தில் நெருங்குவதில்லை. அப்படி நெருங்குபவர்களை மாத்திரமே நமக்கு இணையான தோழர்கள் என்று நட்பு பாராட்டுவோம். இதில் மகாத்மா காந்தி கூட நமக்கு இணையான நண்பர் ஆகி விடுவார். காரணம் அவர் ஒரு டால்ஸ்டாய் பிரியர். எனினும் ஒரு புத்தகத்தை ஊருக்கே பரிந்துரை செய்து அதற்காக எந்த கைங்கரியத்தையாகிலும் செய்துவிடலாம் என்று எண்ணுகிற புத்தகங்கள் எண்ணிக்கையில் மிகக் குறைந்தவைகள் எனலாம். அப்படிப்பட்ட ஒரு புத்தகமாக நான் அனைவருக்கும் பரிந்துரை செய்வது செர்வாண்டஸின் டான் குயிக்ஸாட் நாலாகும்.
                இதனை பரிந்துரைப்பதற்கான காரணம் இது ஒரு நற்செய்தியின் புத்தகமாகும். நற்செய்தி என்றால் மறைபொருளை விளக்கிக் காட்டும் நற்செய்தி அல்ல. இந்த பௌதீக உலகத்தைக் விளக்கிக் காட்டும் secular gospel. நாம் நம்முடைய ஐம்புலன்களால் தொட்டு நுகர்ந்து சுவாசித்து அனுபவிக்கும் இந்த பிரபஞ்சத்தை அவ்வளவு எளிதில் புரிந்துக் கொள்ள முடியும் என்று நினைக்கிறோம். பௌதிக உலகத்தை ஐம்புலன்கள் தான் உணர்ந்தறியும் ஆனால் நம் மனதால் அதனை புரிந்துக் கொள்ளவே முடியாது. நாம் எவ்வளவுக்கு அதிகம் அதனை விளங்கிக் கொள்ள முயல்கிறோமோ அந்த அளவிற்கு அதனை அதன் அறிவியல் தன்மையில் இருந்து கற்பனை நிலைக்கு மாற்றி விடுகிறோம். சொல்லப்போனால் இந்தப் புத்தகம் ஐம்புலன்களான உடலைப் பற்றிய புத்தகமும் தான். யார் இந்த உடலை அதன் முழுமையில் சரியாக புரிந்து கொண்டார்கள்? அதன் முயற்சித்தானே இன்றைக்கு வசை வசையாக பெருகி இருக்கிற கல்வி நிலையங்கள். செர்வாண்டஸ் இந்த பௌதிக உலகத்தை அதிகம் ஆராய்ந்தான். தத்துவத்தையோ, அறிவியலையோ, பூகோலவியலையோ, மருத்துவத்தையோ, அரசியலையோ படிக்க விரும்பும் எவருக்கும் இந்தப் புத்தகம் தான் மிக சிறந்த ஆரம்பமாக இருக்கும்.
                கற்பனைக் கதைகளால் நம்முடைய புத்தி மிகவும் பாழடைந்திருக்கிறது. இதற்கு தேவையானதெல்லாம் அதனைக் கலைந்தெறிய ஒரு மாற்றுக் கதை. புனைவுக் கதை கற்பனைக்கு எதிராக இந்த பௌதிக உலகத்தை கதையாக சொல்லும் ஒரு புனைவாக இருக்க வேண்டும். அப்படிப்பட்டதுதான் டான் குயிக்ஸாட். இரண்டு வால்யூம்களாக தமிழில் நமக்கு இந்த நாவல் கிடைக்கப்பெற்றிருக்கிறது. சிவ முருகேசன் அவர்களின் இந்த மொழிப்பெயர்ப்பு அவ்வளவு வாசிப்புக்கு இனிமையான மொழிபெயர்ப்பாக இருக்கிறது. சில நாட்களுக்கு இந்த நாவலை விட்டுப் பிரிய மனமே இல்லாதிருந்தது. குயிக்ஸாட் மற்றும் சான்கொ பான்ஸா ஆகியோரின் நகைச்சுவைகளுக்கு மீறி இந்த நாவல் பல அறிவார்ந்த விசயங்களைப் பேசி விட்டன. என்னை மிகவும் ஆச்சரியப் படுத்திய ஒரு இடம் இந்தக் கதை முழு பூலோகத்தையும் அதன் அச்ச ரேகை தீர்க்க ரேகையைக் கொண்டு அதன் தூரத்தை கணக்கிட்டுக் காட்டுவதுதான். விமானம் கண்டுபிடிக்காத நேரத்திலேயே பூமியின் மிக நீண்ட இரண்டு பகுதிகளான ஸ்பெயின் நாட்டில் இருந்து கண்டி வரைக்கும் இடைப்பட்ட தூரத்தை தரை வழியாகவும், வான் வழியாகவும் எவ்வளவு நாட்களில் கடக்கலாம் என்பதைக் கணக்கிடுகிறது.  

                முழு நாவலும் மறுமலர்ச்சிக் காலத்தில் கடல் பயணிகள் பூமியை சுற்றியது போன்று முழு பூமியையும் ஒரு சுற்று சுற்றி வருகிறது. இருப்பினும் கதையின் இரண்டு பாத்திரங்கள் உலகைச் சுற்றவில்லை. அவர்கள் உள்ளூர்க் காஸ்டீலியன் வட்டாரத்தை மாத்திரம் தான் சுற்றித்திரிந்தார்கள். அவர்கள் மேற்கொண்ட உள்ளூர் பயணம் ஏறக்குறைய ஒரு உலகப் பயணமாகவே மாறிவிட்டது. பகுத்தறிவுக் கண் திறக்கப்பட்டது போன்று இந்தப் புத்தகத்தை வாசித்தபோது உணர்ந்தேன்.

Comments

Popular posts from this blog

காவியமான ஆனைச் சாத்தான்

கீசு கீசு என்று எங்கும் ஆனைச் சாத்தான் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே    கரிச்சான் குருவிகளை அதிகம் என் ஊரில் பார்த்திருக்கிறேன். வித்தியாசமான நேரங்களில் வித்தியாசமான பாதிப்புகளை அவை என்னுள் ஏற்படுத்தியிருக்கின்றன. இரட்டைவால் குருவி என்பதும் இவர்களுடைய மற்றொரு பெயர். இரட்டைவால் குருவியைக் காகத்துடன் ஒப்பிடும் போது அவ்வளவு ஒன்றும் பெரிய உருவம் கிடையாது. மிகச்சிறிய உருவம்தான் இந்தக் கரிச்சான் குருவி. வெளிநாட்டவர்கள் இங்கு வந்தால் காகம் என்றுதான் அழைப்பார்கள் போலும். அதன் உடலுக்கு அழகே அந்த வால்தான். நீண்டு கடைசியில் இரண்டாக பிளவுபட்டு இருக்கும். அதனாலேயே இரட்டைவால் குருவி என்று பெயரோ என்னவோ. மற்றபடி வால் சிறுத்திருந்தால் இவரையும் சிறிய காகம் என்றுதான் அழைப்பார்கள். காகம் என்றால் கூட சற்று சாம்பல் நிறம் கழுத்தில் பூத்திருக்கும். அண்டங்காக்கையென்றால் கருப்பா பயங்கரமா இருக்கும். அதீதக் கருப்பும் கருப்பல்ல. சாம்பல் பூத்த கருப்பும் கருப்பல்ல. கரிச்சான் குருவிகளின் நிறம்தான் கருப்புக்கு சிறந்த உதாரணம். அதனாலேயே இவர்கள் கரிச்சான் குருவி என்று அழைக்கப்ப...

இரு துரதிருஷ்டசாலிகள்

இரு துரதிருஷ்டசாலிகள்      என்னுடைய மாருதி 800ல் பழுது பார்க்கும் வேலை கொஞ்சம் இருந்தது. ரேடியேட்டரில் தண்ணீரை ஊற்றினால் கொதிகலன் அதனை இன்ஜினின் இருபது நிமிட இயக்கத்திற்குக் கூட சுழற்சி செய்து தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை. வெளியில் சென்று வீடு திரும்பும் ஒவ்வொரு முறையும் தண்ணீர் ஊற்ற வேண்டி இருந்தது. கடைசியாக டெம்பரேச்சர் முள் அதன் வரைவுக் கோட்டீன் எல்லையைத் தாண்டி ℌ அருகே சென்று கொண்டிருந்தது. இதனை கல்பாக்கம் சென்று கொண்டிருக்கும் போது வண்டி மகாபலிபுரத்தைத் தாண்டி அம்மாவின் பாட்டி ஊரான பெருமாளேரியைக் கடக்கும் போதுதான் கவனித்தேன். ஐந்து மைல் தூரத்திற்கு ஒருமுறை வண்டியை நிறுத்தி நிறுத்தி இன்ஜினின் வெப்பம் குறையட்டும் என்று ஒவ்வொரு முறையும் காத்திருக்க வேண்டியதாயிற்று. ஒருவழியாக இன்ஜினில் இருந்து புகை எதுவும் கிளம்பாத அளவுக்கு பத்திரமாக வண்டியை சென்னைக்குக் திரும்பக் கொண்டுவந்து சேர்த்து விட்டேன்.      பழுதை சரி செய்ய மெக்கானிக் குறைந்தது ஒரு வாரம் ஆகும் என்றார். ரேடியேட்டரில் பிரச்சனையாம். இல்லை இல்லை ரேடியேட்டரே பிரச்சனையாம். அதை முழுவதுமாக மாற்றி புதிய ஒ...

கெய்ஷா: ஆண் அகங்காரத்தின் மீட்டெடுப்பு

கெய்ஷா :   ஆண்   அகங்காரத்தின்   மீட்டெடுப்பு ஜெயமோகனின்   கெய்ஷா   சிறுகதை தன்னில் தானே ஒரு வசிகரத்தை வைத்துக் கொண்டு வாசிப்பை வலியின்றி தன்னுள் இலகுவாக பயணிக்கச் செய்யும் கதையாகும் . அவருடைய வலைபக்கத்தில் கதையை பார்த்தவுடன் முழுவதையும் வாசித்து விட வேண்டும் என்ற தீர்மானம் ஏற்பட்டது . கதை ஆரம்பித்ததுதான் தெரியும் எப்படி முடிந்தது என்று எண்ணம் கொஞ்சம் கூட இல்லை . அதுதான் ஒரு சிறந்தக் கதைக்கான இயல்பு . உண்மையில் அன்று காலை , வாசிப்புக்கு ஏற்ற காலையாக இருக்கவில்லை . நோக்கம் எதுவும் இன்றி எதை எதையோ இயந்திரத்தனமாக செய்து கொண்டிருந்தேன் . அந்தத் தருணத்தில் கதை தன்னுடையை கரங்களை கெய்ஷாவைப் போல் தன்னுள் என் வாசிப்பை அரவணைத்துக் கொண்டது .