Skip to main content

வாசகசாலை

தனியாக நூலகம் செல்லும் போதெல்லாம் கண்ணைக் கட்டி யாருமற்ற தீவில் விடப்பட்டதைப் போன்ற மனநிலை இருக்கும். சுற்றிலும் வாசகர்கள் இருப்பார்கள் இருப்பினும் நாம் மாத்திரம் யாருமற்று இருப்பது போன்ற தனிமை நிலவும். அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு செல்லும் போது அப்படிப்பட்ட பயம் இருந்தாலும் கண்ணாடிச் சுவர்கள் ஓரளவிற்கு அந்த பயத்தை போக்கி விடும். வெளி உலகம் நம் கண் முன் ஒரு விஸ்தார நிலையில் காட்சியளிக்கும். நேற்றைய அனுபவம் முற்றிலும் வித்தியாசமானது. #வாசகசாலை ”தமிழ்ச் சிறுகதைகளின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்” வாராந்திர தொடர் நிகழ்வுகள் – நிகழ்வு 2 நேற்று அண்ணா நுலகத்தில் நடைபெற்றது. நிறைய நண்பர்கள் அறிமுகமானார்கள். தனிமையில் புத்தகமும் அதில் கிடைக்கப் பெறும் அறிவைக் காட்டிலும் அதனை நண்பர்கள் மத்தியில் அறிமுகப்படுத்திக் கொள்வது என்பது ஒரு இனிமையான அனுபவம். இதற்காக பெரும்பாலும் நண்பர்களுடனேயே நூலகம் செல்ல விரும்புவேன். நிறைய நேரங்களில் அப்படிப்பட்ட தருணங்கள் வாய்க்கப்பெறாது. அவை மிக அரிதானவை. நேற்று மாத்திரம் ஒரு முழு நூலகமே நட்பு சூழலில் எனக்கு மிக நெருக்கமாக இருந்ததை உணர்ந்தேன். யாரையும் எனக்கு முன்பின் தெரியாது. அனைவரும் கதைகளைப் பகிர்ந்துக் கொள்வதற்காக இணைக்கப்பட்டோம். ஒருவருடன் நட்பை சம்பாதிப்பதற்கு எனக்கு ஏறக்குறைய ஆறுமாதங்களாவது ஆகும். நேற்று மாத்திரம் அந்த இரண்டு மணி நேரத்தில் ஏதோ காலம் காலமாக நாண்பர்களாக பழகிய உணர்வு மற்றவர்களுடன் ஏற்பட்டது. இச்சமுகத்தில் மொழி, இனம், சாதி இவைகளை மீறி எதாகிலும் நம்மை ஒன்றிணைக்குமா என்பது சந்தேகம்தான். நம் அனைவரையும் இந்த வேறுபாடுகள் அனைத்தையும் நீக்கி ஒ்ன்றிணைக்கும் ஒரே மையப் புள்ளி இலக்கியம் மாத்திரமே என்பதை நண்பர் கார்த்திகேயன் கடைசியில் பேசியபோது மகிழ்ச்சியாக இருந்தது. கூட்டம் முடிந்தவுடன் அனைவருடைய முகத்திலும் ஒரு மனநிறைவின் சாயல் தென்பட்டது. beauty will save the world என்று சொல்லவது போன்று literature will unite the world என்று நான் இனி சொல்லிக் கொள்ளலாம்.

Comments

Popular posts from this blog

காவியமான ஆனைச் சாத்தான்

கீசு கீசு என்று எங்கும் ஆனைச் சாத்தான் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே    கரிச்சான் குருவிகளை அதிகம் என் ஊரில் பார்த்திருக்கிறேன். வித்தியாசமான நேரங்களில் வித்தியாசமான பாதிப்புகளை அவை என்னுள் ஏற்படுத்தியிருக்கின்றன. இரட்டைவால் குருவி என்பதும் இவர்களுடைய மற்றொரு பெயர். இரட்டைவால் குருவியைக் காகத்துடன் ஒப்பிடும் போது அவ்வளவு ஒன்றும் பெரிய உருவம் கிடையாது. மிகச்சிறிய உருவம்தான் இந்தக் கரிச்சான் குருவி. வெளிநாட்டவர்கள் இங்கு வந்தால் காகம் என்றுதான் அழைப்பார்கள் போலும். அதன் உடலுக்கு அழகே அந்த வால்தான். நீண்டு கடைசியில் இரண்டாக பிளவுபட்டு இருக்கும். அதனாலேயே இரட்டைவால் குருவி என்று பெயரோ என்னவோ. மற்றபடி வால் சிறுத்திருந்தால் இவரையும் சிறிய காகம் என்றுதான் அழைப்பார்கள். காகம் என்றால் கூட சற்று சாம்பல் நிறம் கழுத்தில் பூத்திருக்கும். அண்டங்காக்கையென்றால் கருப்பா பயங்கரமா இருக்கும். அதீதக் கருப்பும் கருப்பல்ல. சாம்பல் பூத்த கருப்பும் கருப்பல்ல. கரிச்சான் குருவிகளின் நிறம்தான் கருப்புக்கு சிறந்த உதாரணம். அதனாலேயே இவர்கள் கரிச்சான் குருவி என்று அழைக்கப்ப...

இரு துரதிருஷ்டசாலிகள்

இரு துரதிருஷ்டசாலிகள்      என்னுடைய மாருதி 800ல் பழுது பார்க்கும் வேலை கொஞ்சம் இருந்தது. ரேடியேட்டரில் தண்ணீரை ஊற்றினால் கொதிகலன் அதனை இன்ஜினின் இருபது நிமிட இயக்கத்திற்குக் கூட சுழற்சி செய்து தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை. வெளியில் சென்று வீடு திரும்பும் ஒவ்வொரு முறையும் தண்ணீர் ஊற்ற வேண்டி இருந்தது. கடைசியாக டெம்பரேச்சர் முள் அதன் வரைவுக் கோட்டீன் எல்லையைத் தாண்டி ℌ அருகே சென்று கொண்டிருந்தது. இதனை கல்பாக்கம் சென்று கொண்டிருக்கும் போது வண்டி மகாபலிபுரத்தைத் தாண்டி அம்மாவின் பாட்டி ஊரான பெருமாளேரியைக் கடக்கும் போதுதான் கவனித்தேன். ஐந்து மைல் தூரத்திற்கு ஒருமுறை வண்டியை நிறுத்தி நிறுத்தி இன்ஜினின் வெப்பம் குறையட்டும் என்று ஒவ்வொரு முறையும் காத்திருக்க வேண்டியதாயிற்று. ஒருவழியாக இன்ஜினில் இருந்து புகை எதுவும் கிளம்பாத அளவுக்கு பத்திரமாக வண்டியை சென்னைக்குக் திரும்பக் கொண்டுவந்து சேர்த்து விட்டேன்.      பழுதை சரி செய்ய மெக்கானிக் குறைந்தது ஒரு வாரம் ஆகும் என்றார். ரேடியேட்டரில் பிரச்சனையாம். இல்லை இல்லை ரேடியேட்டரே பிரச்சனையாம். அதை முழுவதுமாக மாற்றி புதிய ஒ...

இமையத்தின் வீணடிக்கப்படாத போலச்(imitate) செய்யும் சொற்கள்

இமையத்தின் வீணடிக்கப்படாத போலச் (imitate) செய்யும் சொற்கள் இமையம் எப்போதும் வார்த்தைகளை எழுத்தாளர்கள் வீணடிக்கிறார்கள் என்று குறைவு பட்டுக் கொண்டிருப்பார். இதனால் மற்ற எழுத்தாளர்களை திட்டவும் செய்திருக்கிறார். ஆரம்பத்தில் இதனைக் கேட்க்கும் போது உள்ளூர குற்ற உணர்வு ஏற்படும். எழுதுவதற்கு தயக்கமும் ஏற்படும். எழுத்தை வீணடிக்கக் கூடாது என்று இமையம் சொல்லும் போது அவர் எதை அர்த்தப்படுத்தி பேசினார் என்பது இன்றைக்கு அவருடைய பேட்டியை இந்துவில் படித்த பின்புதான் புரிந்து கொண்டேன். இமையம் தன் எழுத்திற்கென்று சமீப காலங்களாக ஒரு கோட்ப்பாட்டை முன் நிறுத்திக் கொண்டிருக்கிறார். இதனை கோட்பாடு என்று சொல்வதற்கு கூட பயமாய் இருக்கிறது. காரணம் கோட்பாடு என்ற வார்த்தை முழுவதும் இப்போது தவறாக அதுவும் கல்வி புலங்களில் பேராசிரியர்களால் அறைகுறையாக புரிந்து கொள்ளப்பட்டு போதிக்கப் பட்டு பதிப்பிக்கப்பட்டும் வருகின்றன. எனினும் இமையம் உருவாக்கும் தன்னுடைய விழுமியங்கள் (இந்த வார்த்தை கூட கொஞ்சம் சிக்கலான வார்த்தை தான்) முற்றிலும் தன்னுடைய படைப்பு சார்ந்ததாகவே இருக்க செய்கின்றன. படைப்பில் இருந்து உருவாக்கப்படும் ...