Skip to main content

கசாக்குகளின் இருட்டு: இருட்டு பகலைப் போன்றே இயல்பானது



கசாக்குகளின் இருட்டு: இருட்டு பகலைப் போன்றே இயல்பானது
             நாவலின் சில வரிகள் மின்னல் போன்று நம் வாசிப்பில் சொற்ப நேரத்தில் மின்னிவிட்டு போகின்றன. அப்படிப்பட்ட மின்னல் போன்ற வரிகளை உடைய நாவல்கள் மிகவும் அரிதானவை. நல்ல மழை காலத்தில் மின்னல் வீச்சுகளுக்கு கணக்கே கிடையாது. தொடர்ந்து மின்னல்களும் இடிகளும் வந்து கொண்டே இருக்கும். தொடர் மின்னல்களை உடைய நாவல் என ஆரம்ப கால பிரெஞ்சு நாவலான கார்கென்டுவா மற்றும் பென்ட்டகுரல் நாவலை சொல்வேன். மறுமலர்ச்சி கால கட்டத்தில் உருவான அந்த நாவலை மனம் உட்கிறகித்துக் கொள்ள கொஞ்சம் ஆற்றல் தேவைப்பட்டது.
தொடர் மின்னல்கள் வெளிச்சத்தின் தொடர் நிகழ்வாக இல்லாவிட்டாலும் ஆங்காங்கே வாசிப்பில் சிறு சிறு மின்னல் கற்றைகளை உருவாக்கியது கசாக்கின் இதிகாசம். மொழிபெயர்ப்பில் யூமா வாசுகி இப்படிப்பட்ட ஒளிக் கடத்துதலை நிகழ்த்தியது பெறும் சாதனை. கார்கன்டுவா போன்று இல்லாவிட்டாலும் வாசிப்பில் ஏதோ தூரத்தில் கீழ்வானத்தில் மின்னல் வெளிச்சம் மழைக்கான முகாந்திரம் இன்றி மின்னுவது போன்று இருக்கிறது ககசாக்கின் இதிகாசம். கசாக் என்னும் வட்டார இலக்கியம் உலக இலக்கியத்திற்கு இணையான சாதனை கண்டிருப்பது வியப்புக்கு உரியது.
வாசிப்பில் மின்னல் தாக்கம் என்பது வசிப்பை சற்று நேரம்  நிறுத்த வல்லது. அல்லது தாக்கம் அப்படியே நம்முள் சேமிக்க படுவது போன்றது. கதையின் நாயகன் கசாக்குக்கு வந்து ஓராசிரியர் பள்ளியை நடத்துகிறான். பெறும் பனிப்போருக்கு இடையில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இஸ்லாமியரின் மதராசா கல்வி இந்த நவீன கல்வியான ஓராசிரியர் பள்ளியால் பாதிப்படையும் என்ற பயம் ஒருபுறம். நவீன கல்வி என்பது யார் விரும்பினாலும் வெறுத்தாலும் தவிர்க்க முடியாத ஒன்று என்பது மறுபுறம். கசாக் இந்த குழப்பமான நிலையில் சிக்கிக் கொண்டிருக்கிறது. உதாரணத்திற்கு கசாக்கின் நம்பிக்கையின் பெரும் ஞான புதையல்களை அப்படியே வைத்துக் கொள்வதா அல்லது நவீனத்திற்குள் பயணித்து பழமையை தியாகம் செய்வதா என்ற குழப்பத்தில் கசாக் சிக்கிக் கொள்கிறது.
நாவலின் ஒரு சிறிய சம்பவம் இதனை மிக அழகாக விளக்கும் என நினைக்கிறேன். கசாக்குகளின் விளக்குகள் இரவில் வீணாக எறியவிடப்படுவதில்லை. தேவைக்கு மாத்திரமே விளக்கின் வெளிச்சம் அவசியப்படுகிறது. தேவை இல்லை என்றால் கசாக்குக்காரர்கள் விளக்கை அனைத்து வைத்து விடுகிறார்கள். இருட்டு என்பது தூங்குவதற்கு மாத்திரம் அல்ல என்பது நாவலை படிக்கும் போது உணர்த்துவிக்கப் படுகிறது. இருட்டை வெளிச்சம் கொண்டு விரட்டுவது மிகவும் அபத்தமானது என்பது தெரிகிறது. ஆனால் நடப்பியலில் இருந்து பார்க்கும் பொது தேவைக்கு மீறி விளக்கை அனைப்பது கசாக்குக்காரர்களின் கஞ்சத்தனம் என்று மேலோட்டமாக சொல்லிவிடலாம்.
இரண்டாம் அடுக்கின் உள் அர்த்தம் வேறு. விளக்கை அனைத்து வைப்பது அபத்தம் அல்ல. இருட்டு இயல்பானது. இந்த இருட்டை அவசியம் இன்றி வெளிச்சம் கொண்டு விரட்டுவதுதான் அபத்தம். நூற்றாண்டு தனிமையில் முதல் முதலில் பனிக்கட்டியை கண்டு அதை தொட்டு பார்த்தவுடன்இது சுடுகிறது” என்று புயெந்தியா சொல்வது நமக்கு அபத்தம். ஆனால் நாவலின் வாசிப்பில் குளிர்ச்சிக்கு வார்த்தை கண்டுபிடிக்காத அந்த ’பிரிமிட்டிவ்’ காலத்தில் சூடு என்று சொல்லும் போது பனிக்கட்டி நாம் கண் முன் மார்க்வேசின் மேஜிக் பொருளாக மாறுகிறது. அதே போன்று இருட்டை இயல்பாக எற்றுக் கொள்ளும் இந்த கசாக்குகரர்களின் இந்த கஞ்சத்தனம் ஓ வி விஜயனின் மேஜிக் உலகமாக மாறுகிறது.
ஓராசிரியர் பள்ளியின் ஆசிரியர் வி இருட்டில் விளக்கை ஏற்றி எதையோ வாசித்துக் கொண்டு இருக்கிறான். மதராசாவின் மொல்லாக்கா அவனை சந்திக்க வருகிறார். விளக்கு எறிவதையும் ரவி அதன் வெளிச்சதில் எதையோ வாசிப்பதையும் கண்டு மொல்லாக்கா வி வேதம் வாசிக்கிறான் என்று யூகித்துக் கொள்கிறார். அது வேதம் அல்ல கதை புத்தகம் என்று தெரிந்தவுடன் உரிமையுடன் விளக்கை அனைத்துவிட்டு பேச்சை ஆரம்பிக்கிறார். இந்த இடத்தில் இருட்டு, கதை புத்தகம், ரவியின் வாசிப்பு ஆகிய இவைகளை ஒரு பக்கமும், இருட்டு, மொல்லாக்கா, அவருடைய யூகமான வேத புத்தகம் இவைகளை இன்னொரு பக்கமும் எதிரும் புதிருமாக வைத்து பார்க்கும் போது அந்த பகுதி வாசகனுக்கு ஒரு மின்னல் வெளிச்சம். இதை மேற்படி வைத்து வியாக்கியானம் செய்ய முடியாது. இது விளக்கு தரும் சுடர் போன்றது. வாசிப்பில் கதையை இருட்டாக உணர்ந்து நகர்த்தும் போது அவசியத்திற்காக வெளிச்சம் ஒரு நொடியில் பிரகாசித்து அனைகிறது.
ரவியின் வெளிச்சம் வேறு, வாசிப்பு வேறு , இருட்டை பற்றின அவன் புரிதல் வேறு. அவனுக்கு இருட்டு அவசியம் இல்லாதது போன்று இருக்கலாம். அவனுடைய வெளிச்சம் கதைகளை வாசிக்க தொடர்ந்து எரியட்டும். ஆனால் கசாக்குகளுக்கு அவசியமான வெளிச்சம் எவ்வளவு முக்கியமோ அதே போன்று இருட்டும் பகலைப் போன்று மிக மிக முக்கியமானதும் இயல்பானதும் தான். அவர்கள் பாகலை ஏற்றுக் கொள்வது போன்றே இருட்டையும் எற்றுக் கொள்கிறார்கள். அந்த இயல்பான இருட்டில் அவர்களின் அவசியமான சிறிது நேர வெளிச்சத்தில் அவர்களின் வேதம்  அதிக முக்கியத்துவம் பெற்ற பிரதியாகிறது. வெளிச்சம் என்பது சிறிது நேரத்திற்கேயான மனதை தெளிவடைய செய்யும் வேதத்தின் புனிதச் சுடர். அந்த புனித சுடர் சிறிது நேரத்திற்கேயானது. மற்றபடி கசாக்கின் இருட்டு பாகலைப் போன்றே இயல்பானது.


Comments

Popular posts from this blog

காவியமான ஆனைச் சாத்தான்

கீசு கீசு என்று எங்கும் ஆனைச் சாத்தான் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே    கரிச்சான் குருவிகளை அதிகம் என் ஊரில் பார்த்திருக்கிறேன். வித்தியாசமான நேரங்களில் வித்தியாசமான பாதிப்புகளை அவை என்னுள் ஏற்படுத்தியிருக்கின்றன. இரட்டைவால் குருவி என்பதும் இவர்களுடைய மற்றொரு பெயர். இரட்டைவால் குருவியைக் காகத்துடன் ஒப்பிடும் போது அவ்வளவு ஒன்றும் பெரிய உருவம் கிடையாது. மிகச்சிறிய உருவம்தான் இந்தக் கரிச்சான் குருவி. வெளிநாட்டவர்கள் இங்கு வந்தால் காகம் என்றுதான் அழைப்பார்கள் போலும். அதன் உடலுக்கு அழகே அந்த வால்தான். நீண்டு கடைசியில் இரண்டாக பிளவுபட்டு இருக்கும். அதனாலேயே இரட்டைவால் குருவி என்று பெயரோ என்னவோ. மற்றபடி வால் சிறுத்திருந்தால் இவரையும் சிறிய காகம் என்றுதான் அழைப்பார்கள். காகம் என்றால் கூட சற்று சாம்பல் நிறம் கழுத்தில் பூத்திருக்கும். அண்டங்காக்கையென்றால் கருப்பா பயங்கரமா இருக்கும். அதீதக் கருப்பும் கருப்பல்ல. சாம்பல் பூத்த கருப்பும் கருப்பல்ல. கரிச்சான் குருவிகளின் நிறம்தான் கருப்புக்கு சிறந்த உதாரணம். அதனாலேயே இவர்கள் கரிச்சான் குருவி என்று அழைக்கப்ப...

இரு துரதிருஷ்டசாலிகள்

இரு துரதிருஷ்டசாலிகள்      என்னுடைய மாருதி 800ல் பழுது பார்க்கும் வேலை கொஞ்சம் இருந்தது. ரேடியேட்டரில் தண்ணீரை ஊற்றினால் கொதிகலன் அதனை இன்ஜினின் இருபது நிமிட இயக்கத்திற்குக் கூட சுழற்சி செய்து தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை. வெளியில் சென்று வீடு திரும்பும் ஒவ்வொரு முறையும் தண்ணீர் ஊற்ற வேண்டி இருந்தது. கடைசியாக டெம்பரேச்சர் முள் அதன் வரைவுக் கோட்டீன் எல்லையைத் தாண்டி ℌ அருகே சென்று கொண்டிருந்தது. இதனை கல்பாக்கம் சென்று கொண்டிருக்கும் போது வண்டி மகாபலிபுரத்தைத் தாண்டி அம்மாவின் பாட்டி ஊரான பெருமாளேரியைக் கடக்கும் போதுதான் கவனித்தேன். ஐந்து மைல் தூரத்திற்கு ஒருமுறை வண்டியை நிறுத்தி நிறுத்தி இன்ஜினின் வெப்பம் குறையட்டும் என்று ஒவ்வொரு முறையும் காத்திருக்க வேண்டியதாயிற்று. ஒருவழியாக இன்ஜினில் இருந்து புகை எதுவும் கிளம்பாத அளவுக்கு பத்திரமாக வண்டியை சென்னைக்குக் திரும்பக் கொண்டுவந்து சேர்த்து விட்டேன்.      பழுதை சரி செய்ய மெக்கானிக் குறைந்தது ஒரு வாரம் ஆகும் என்றார். ரேடியேட்டரில் பிரச்சனையாம். இல்லை இல்லை ரேடியேட்டரே பிரச்சனையாம். அதை முழுவதுமாக மாற்றி புதிய ஒ...

இமையத்தின் வீணடிக்கப்படாத போலச்(imitate) செய்யும் சொற்கள்

இமையத்தின் வீணடிக்கப்படாத போலச் (imitate) செய்யும் சொற்கள் இமையம் எப்போதும் வார்த்தைகளை எழுத்தாளர்கள் வீணடிக்கிறார்கள் என்று குறைவு பட்டுக் கொண்டிருப்பார். இதனால் மற்ற எழுத்தாளர்களை திட்டவும் செய்திருக்கிறார். ஆரம்பத்தில் இதனைக் கேட்க்கும் போது உள்ளூர குற்ற உணர்வு ஏற்படும். எழுதுவதற்கு தயக்கமும் ஏற்படும். எழுத்தை வீணடிக்கக் கூடாது என்று இமையம் சொல்லும் போது அவர் எதை அர்த்தப்படுத்தி பேசினார் என்பது இன்றைக்கு அவருடைய பேட்டியை இந்துவில் படித்த பின்புதான் புரிந்து கொண்டேன். இமையம் தன் எழுத்திற்கென்று சமீப காலங்களாக ஒரு கோட்ப்பாட்டை முன் நிறுத்திக் கொண்டிருக்கிறார். இதனை கோட்பாடு என்று சொல்வதற்கு கூட பயமாய் இருக்கிறது. காரணம் கோட்பாடு என்ற வார்த்தை முழுவதும் இப்போது தவறாக அதுவும் கல்வி புலங்களில் பேராசிரியர்களால் அறைகுறையாக புரிந்து கொள்ளப்பட்டு போதிக்கப் பட்டு பதிப்பிக்கப்பட்டும் வருகின்றன. எனினும் இமையம் உருவாக்கும் தன்னுடைய விழுமியங்கள் (இந்த வார்த்தை கூட கொஞ்சம் சிக்கலான வார்த்தை தான்) முற்றிலும் தன்னுடைய படைப்பு சார்ந்ததாகவே இருக்க செய்கின்றன. படைப்பில் இருந்து உருவாக்கப்படும் ...