கதையின் முடிவுக்கு வந்து விட்டீர்கள் : வாசகனில் ஒளிந்திருக்கும் குற்றவாளியை நோக்கிய தேடல் அபிலாஷின் சமீபத்திய நாவலான கதையின் முடிவுக்கு வந்து விட்டீர்கள் நாவலை வாசிக்கும் போது அதை ஒரு குறிப்பிட்ட நாவல் வகைமைக்குள் புகுத்துவது என்பது சிரமமான காரியமாக இருக்கிறது . இது துப்பறியும் நாவலா , திரில்லர் வகைமையா அல்லது வெறுமனே நாவல் மட்டுமா என்ற கேள்வி எழுந்துகொண்டிருக்கிறது . எழுத்தாளன் இந்த வகைமையில் தான் தன் கதையை பரிசோதிக்க போகிறேன் என்று முயற்சி செய்து ஒரு கதையை உருவாக்கி விடுகிறான் ஆனால் கதை தான் எதிர்பார்த்த வகைமைக்கு மீறி எதுவும் அல்லாத ஒரு வகைமையில் நிற்கிறது . இதற்கு காரணம் கதையை பரிசோதனை என்ற முயற்சியில் செய்ததினால் உண்டானதாகும் . விளைவு வகைமைப்பாட்டிற்கு வெளியில் பிரதி தன்னை நிறுத்திக் கொள்கிறது . இங்கு கேள்வி பரிசோதனையில் படைப்பிற்க்கான உயிர் அதில் தக்கவைக்கப்படுகிறதா அல்லது பரிசோதனையில் எதுவும் அற்ற நிலையில் நிறுத்தப்படுகிறதா என்பதுதான் .