Friday, November 13, 2020

கரைந்த நிழல்கள்



வீட்டின் பின்புறம் காட்டுவா மரம் ஒன்று இருக்கிறது. பசுமையான இலைகள் மூடி  தழைத்து நிற்கிறது.   மொட்டை மாடிக்கு சென்று சிறிது நேரம் தனிமையில் இருக்கும் போதெல்லாம் அந்த மரத்தில் வந்தடங்கும் பறவைகளை உற்று நோக்குவது வாடிக்கை. சில  நேரங்களில் பச்சைக் கிளிகள் ஒன்று இரண்டு என வந்து அமர்ந்திருக்கும். தண்ணீரில் சிறு ஓடு ஒன்றை விட்டெறிந்தால் எப்படி தத்தி தத்தி  குதித்து செல்லுமோ அது போன்று சிறு கிளைகளில் சிட்டு குருவிகள் ஓர் இடத்தில் உட்காராமல் சதா குதித்துக் கொண்டே இருக்கும். காகங்கள் இல்லாமல் அந்த மரம் ஓய்ந்திருப்பதில்லை. 

Tuesday, October 27, 2020

கடைசியில் எஞ்சி நிற்பது

https://images.app.goo.gl/dq563dAy1QNehLKbA

வரலாறு முழுக்க மனித சிந்தனை ஒரு மாபெரும் பரிணாம வளர்ச்சியில் பயணித்து கொண்டிருக்கிறது. நேற்றைய சிந்தனை இன்று இல்லை. இன்று எதை இலட்சியக் கனவாக உறுதியாக பற்றி பிடித்துக் கொண்டிருக்கிறோமோ அது நாளை காலாவதியாகிவிட்டிருக்கும். உண்மை என்னவெனில் மனிதர்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக சிந்திப்பவர்கள் அல்ல. மனிதன் யோசனை செய்யும் விலங்கு என்று சொன்னால் அது பொய்.

Monday, August 10, 2020

ஆசை முகம் மறந்து போச்சே, நினைவு மறக்க லாமோ

                                                                                                                                                                                                                         Tamil Nadu Professor, Theatre Director Pitambarlal Rajani Dies Of ...        

    முதல் சந்திப்பில் பார்த்த ஒருவருடைய முகத்தை வாழ்நாளில்  ஒருபோதும் மறக்கவே முடியாது.  அது நெஞ்சில் வரையப்பட்ட அழியாத கோலம். நீடித்து காலத்திற்கும் நிலைநிற்கும் முகம் அது. பின்பு எத்தனை வருடங்கள் அந்த முகத்தோடு வாழ்ந்து பழகினாலும் அந்த முதல் சந்திப்பில்  பெற்றுக் கொண்ட சித்திரத்துக்கு அது ஈடாகாது. முதல் சந்திப்பின் முகம் தனித்து நிற்கும் முகம்.  நம் நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் முதல் சந்திப்பின் முகத்தை நம் மனத்திற்குள் வரைந்து வைத்திருப்போம்.  விதிவிலக்காக அம்மாவின் முகத்தை வேண்டுமானால் சொல்லலாம். அது பழகிப் போன முகம். அது வியப்பையோ, அச்சத்தையோ திடீர் என்று ஏற்படுத்துவதில்லை. கருனையின் முகம் அது. மற்றபடி அப்பா முதல் நண்பர்கள் வரை எல்லாருடைய முகங்களும் ஏதோ ஒரு தாக்கத்தை நமக்குள் செலுத்தி அம் முகத்தை மனதிற்குள் பதியவைக்கின்றன. புகைப்பட ருவி போன்று. ரு கிளிக் செய்தவுடன் பட்டென்று வெளிச்சம் பாய்ந்து காட்சி கருவிக்குள் பதிய வைக்கப்படுகிறது.

Wednesday, April 15, 2020

பொன் பரப்பி



தெரு முனையில்தான் மருந்து கடை. இந்த மிகக் குறுகிய தூரத்தை நடந்து சென்று வருவதற்குள் எத்தனை அதிசயங்கள் கண் முன் நடக்கின்றன. இது சென்னைதானா! சாலை வெறிச்சோடிக் கிடக்கிறது. மருந்து வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வரும் போது தேன் சிட்டுக்கள் சத்தம் எழுப்பிக் கொண்டிருக்கின்றன. சொஞ்சம் கவனித்து பார்த்தால் சிறிய மரங்களில் ஒன்று இரண்டு என ஆங்காங்கே தேன் சிட்டுக்களை காண முடிகிறது. தனித்தனியாக ஒவ்வொரு பறவையின் சத்தத்தையும் தனித்து கேட்கமுடிகிறது. கிளியின் சத்தமும் கேட்கிறது. தூரத்தில் குயிலின் ஓசை. கவித்துவமாக இருக்கட்டுமே என்று சொல்லவில்லை. உண்மை. இவர்கள் எல்லாம் இத்தனை நாட்கள் எங்கிருந்தார்கள். ஏதோ காக்கைகள் மாத்திரமே நிரந்தர சென்னைவாசிகள் போன்று முன்பெல்லாம் நகரத்தை வட்டம் வருவார்கள். அத்தனை காக்கைகள் இருந்தும் இப்போது அவைகளை பொருட்படுத்த முடியவில்லை. சிங்காரமான தேன்சிட்டும், கண்ணுக்கு தெரியாமல் கூவிக்கொண்டிருக்கும் குயிலும் எண்ணிக்கையில் குறைவுதான். விரல் விட்டு எண்ணிவிடலாம். இப்போது தெருவில் அவர்களே முக்கிய பிரஜைகள் என்று ஆகிவிட்டார்கள். காகங்களின் இருப்பு பொருளற்று போய்விட்டது.  

Saturday, March 28, 2020

நாலுகெட்டு: புதிய தாயத்தின் பாரதக்கதை



இந்த அகண்ட பாரதத்தின் ஒரு சிறிய பகுதியாக கேரளம் தன்னைத்தானே கதையாக எழுதிக் கொண்டது “நாலுகெட்டு” என்று M T Vயின் நாவலை சொல்லலாம். நாலு கெட்டு வீட்டின் பாகப்பிரிவினை மண்ணின் பெருங்கதை. இந்த நாவலை எம். டி. வாசுதேவன் நாயர் ஒரு வட்டாரத்தின் நாவலாக எழுதியிருக்கலாம். ஆனால் நாவல் விரிந்த மண்ணின் கதையாக மாறுகிறது. வட்டாரத்தோடு பாரதத்தின் கதையும் நாவலோடு சேர்த்து நெசவு செய்யப்படுகிறது. இங்கு பாரதம் என்பது தேசம் என்று பொருள் கொள்ள முடியாது. தேசம் என்பது மிக சமீபத்தில் உருவான கருத்தியல். அதற்கு நூறு வருடங்கள் கூட ஆகவில்லை. ஆனால் அகண்ட பாரதம் அதற்கு முன்பிருந்தே விரிந்த நிலமாக ஒரு மாபெரும் கதையால் தன் இருப்பை மக்கள் மனதில் எழுதிக் கொண்டே இருக்கிறது. பாரதக் கதை மக்கள் மனதில் புவியியல் எல்லைக் கோட்டைக் கொண்டு வரையப்பட்ட பெருங்கதை என்று சொல்லலாம்.
இம்மண்ணின்  எந்த வட்டாரமும் இந்த பாரதக் கதையோடு தன் கதையையும் இணைத்து நெசவு செய்து கொள்ளும் போது அவ்வட்டாரம் பரந்துவிரிந்த நிலப்பரப்பின் பகுதியாக மாறிவிடுகிறது. எம் டி வாசுதேவன் நாயரின் நாலுகெட்டு நவீனத்தின் உள்ளடக்கமான Indian Literature என்பதை விட மகாபாரத்தத்தின் மீண்டுமான கதைசொல்லல் வடிவம் என்று சொல்ல வேண்டும்.

Monday, March 23, 2020

பேரிடர் காலங்களும், நீடிக்கும் பெருங்காதல் கதைகளும்


Giovanni Boccaccioவின் The Decameron  நூறு கதைகளின் தொகுப்பைக் கொண்ட மறுமலர்ச்சி காலகட்டத்தின் பேரிலக்கியம். அதில் இருந்து ஒரு கதையை சமீபத்தில் வாசிக்க நேர்ந்தது. வாசித்த அந்த கதை லத்தின் அமெரிக்க இலக்கியத்தில் உள்ள மற்றொரு கதையை நினைவுக்கு கொண்டு வந்தது. இந்த இரண்டு கதைகளும் கொள்ளை நோயை பின்புலமாக வைத்து எழுதப்பட்ட கதைகள். மையக்கதை என்னவோ என்றும் அழியாத மானுடத்தின் ஒப்பற்ற கதையான பெருங்காதலைப் பற்றியது. டெக்கமரனின் அந்த கதை நீண்ட நட்களுக்கு மனதில் இருந்து அகலாமல் அப்படியே நிலைகொண்டுவிட்டது. அக்கதையின் தலைப்பு "Federigo's Falcon".

Saturday, March 21, 2020

பொந்தன் மாடன்



பொந்தன் மாடன் ஒரு வீட்டுக்கு சொந்தமானவன் அல்ல. எந்த வீடும் அவனை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. குடும்பம் அவனுக்கு கிடையாது. வீடு, குடும்பம் என எதை அவன் தேடிக்கொண்டாலும், அல்லது அவனுக்கு கொடுக்கப்பட்டாலும் அவைகள் நீடிக்கப்போவதில்லை. எதுவுமற்று தன் மண்ணில் சுற்றித் திரிவதே அவனுக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கை. மிகவும் வித்தியாசமான மனிதன் இந்த பொந்தன் மாடன். வீடு கட்டிக் கொள்வதும், குடும்பத்தை தேடிக் கொள்வதும் மனிதன் காலம் காலமாக தனக்கென நிறைவேற்றிக் கொள்ளும் அத்தியாவசியக் கடன்கள். இவைகள் எதுவுமே இல்லாமல் ஒருவன் வாழ்வின் முடிவுவரை வாழ்ந்துவிட்டால் அவன் பெரும்பான்மையில் இருந்து தனித்து நிற்பவனாக மாறிவிடுகிறான். இந்திய சமூகம் அப்படிப்பட்ட மனிதனை கணக்கில் எடுத்துக் கொள்வதே இல்லை. பொந்தன் மாடன் முக்கியப்படுத்திப் பார்க்க வேண்டிய ஒருவன். அவனை தனித்தவனாக பார்க்கும் போது அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவனாக தெரியமாட்டான். பொந்தன் மாடனை தனித்து காட்டி முக்கியத்துவம் பெற்ற மனிதனாக பார்க்க வேண்டும் எனில் அவனை போன்று அவனல்லாத வேறு ஒருவனோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது மாத்திரமே அவன் தனித்து தெரிவான்.     

Monday, February 24, 2020

தனித்து நிற்கும் எருக்கஞ்செடி


இன்று காலையில் நடை பயணம் செல்லும் போது எருக்கஞ்செடி ஒன்று கண்ணில் பட்டது. நகரத்தில் செடிகளும் பறவைகளும் அபூர்வமாக கண்ணில் படும் போது அவைகள் அதி முக்கியமானவைகளாக மாறிவிடுகின்றன. அதுவே கிராமம் என்றால் அவைகளுக்கு அவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை. இங்கே ஜன நெருக்கடியின் மத்தியில் ஒற்றை ஆளாய் இவைகள் முக்கியத்துவம் பெற்று தனித்து நிற்கின்றன. தனித்து நிற்பவர்களுக்கே எப்போதும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. நகரத்திலேயே பிறந்த ஒருவனுக்கு இவ்வளவு மக்கள் நெருக்கடியை பார்க்கும் போது அது புதிதானது அல்ல. கிராமத்தானுக்கு அது மிரட்சியை உண்டாக்கும். செடியும், பூவும், பறவைகளும்  நகரவாசிகளுக்கு அபூர்வமானவைகள். எருக்கஞ்செடி இன்று கண்ணில் பட்டவுடன் அது அவ்வளவு முக்கியத்துவம் கொண்டதாகிவிட்டது. அதுவும் கடற்கரை ஓரத்தில் ஒரு செடி தனித்து நிற்கும் போது ”இங்கே ஒருவன் உன் பார்வைக்காக தனித்து நிற்கிறேன். என்னிடம் அருகில் வா. வந்து மலர்களையும், இலைகளையும், பிஞ்சு விட்டு இருக்கிற பச்சைக் காயையையும் கொஞ்சம் உன் கேமராவில் படம் எடுத்துக் கொள்” என்று அழைப்பு விடுப்பது போன்று இருந்தது.

Sunday, February 16, 2020

வாசி(ரி)ப்பு எனும் தொற்று நோய்க் கிருமி



சென்ற ஆண்டு மே மாத விடுமுறையை வீணாக்காமல் பயனுள்ளதாக கழிக்க வேண்டும் என்று முடிவு ஒன்று எடுக்கப்பட்டது. வருட இறுதியில் வாசிப்புக்கு ஒரு தமிழ் ஒரு ஐரோப்பிய நாவல் என இருந்தது அந்த முடிவு. முப்பது நாட்கள் விடுமுறை எதையுமே செய்யாமல் வீணடிக்கப்பட்டால் அது குறித்த வருத்தம் காசை வீணாக்கியதற்கு இணையாக இருக்கும். தொடர் விடுமுறைகள் பலனற்ற விதத்தில் விரயம் ஆகும் போது அங்கே மிக பெரிய வெற்றிடமும் வெறுமையும் ஆட்கொண்டு விடுகிறது. 
சென்ற ஆண்டு அது ஏற்படக் கூடாது என்பது மிகத் தெளிவாக இருந்தது. ஏற்கனவே Ph.Dக்காக செலவிட்டு பலன் கிடைக்காமல் போன நாட்களின் வெற்றிடம் வேறு இன்னும் விரிந்து பாதாளம் போன்று பூதாகரமாகிக் கிடக்கிறது. எதை கொண்டு அதனை பூர்த்தி செய்து கொள்வது என்பது தெரியவில்லை. நாட்களின் வெற்றிடத்தை நல்ல கதைகள் மாத்திரமே பூர்த்தி செய்யக்கூடும் என்பது நம்பிக்கை. 

Thursday, February 13, 2020

இருவர் என்பது முழுமை சார்ந்த விசயம்




இலட்சிய கதைகளின் நாயகர்கள் தங்களுடைய சிந்தனைத் திறனுக்கு முற்றிலும் மாறுபட்டவர்களையே நண்பர்களாக எற்றுக் கொள்கிறார்கள். டான் குவிக்சாட் அப்படிப்பட்ட இலட்சிய நாயகன். தன் வீர சாகச பயணத்தில் தனக்கென்று தோழன் ஒருவனை கண்டடைந்தான். குவிசாட்டுக்கு கொஞ்சமும் இணையானவன் அல்ல அவன். தன்னோடு ஒப்பிடும் போது அவ்வளவு பெரிய அறிவாளி ஒன்றும் கிடையாது. ஆனாலும் குவிசாட்டுக்கு அவனை பிடித்திருந்தது. இத்தனைக்கும் பண்ணை தொழிலாளி என்ற தகுதி நிலைதான் அவனுக்கு. குவிக்சாட் அவனை நண்பனாக ஏற்றுக் கொண்டான். சொல்லப்போனால்  சான்சோ இலட்சிய நாயகனின் கண்ணாடியில் பிரதிபலிக்கும் பிரதி பிம்பம். பார்த்த மாத்திரத்தில் எப்படி தன்னுடன் இலட்சிய பயணத்தில் துணைக்கு அழைக்க முடியும். சாஞ்சோ வேறொருவன் அல்ல. குவிக்சாட்டை கண்ணாடியில் நிழலாக பிரதிபலிப்பவன் அவன்.  
சந்தித்த போது இருவருக்கும் அறிமுகம் ஏதும் தேவை இருந்திருக்கவில்லை. அழைத்தவுடனேய அவனும் எதிர் கேள்வி எதுவும் கேட்க்காமல் கிளம்பிவிடான்.

Monday, January 20, 2020

James Joyce: காவியம் பாடிய கலைஞன்


ஜேம்ஸ் ஜாய்சுக்கு தன் நாட்டைப் பற்றின தேசிய காவியம் ஒன்றை எழுத வேண்டும் என்ற விருப்பம் இருந்தது போலும். அதனை யுலிசஸ் என்ற நாவலாக எழுதிவிட்டார். காவியத்துக்கும் மண்ணுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. காவியம் மண்ணைப் பற்றி பேசும் போது அம் மண்ணும் மக்களும் காலத்தால் மறக்கப்பட்டாலும் காவியத்தால் ஆயிரம் ஆண்டுகள் கழிந்தாலும் நினைவில் நிலை நிறுத்தப்படுகிறார்கள். இது காவியத்தில் மொழியின் சாதனை.  காவியம் பாடாத மொழி தன் மண்ணை தனக்கு சொந்தம் பாராட்டிக் கொள்ள முடியாது. சட்ட ரீதியாக மண் சொந்தமாக இல்லாமல் இருக்கலாம்.  உணர்வு ரீதியில் உரிமையின் அடிப்படையில் மண் காவியத்தால் சொந்தமாக்கப்படுகிறது.  மொழி தன் உரிமையை மண்ணின் மீது நிலை நாட்டிக் கொள்ள இருக்கும் ஒரே வாய்ப்பு காவியம் படைப்பதுதான்.  ஜாய்சுக்கு அந்த தேவை இருந்திருக்கிறது. அவர் ஒரு காவியம் இயற்றினால் போதும் அயர்லாந்து அவருக்கு சொந்தமானதாக ஆகி விடும்.  எல்லைக் கோடு இட்டு நிலத்தை ஆட்சி செய்பவன் உண்மையான அரசன் அன்று.  வேண்டுமானால் அவன் வரி வசூலித்துக் கொள்ளலாம். மண் அவனுக்கு சொந்தம் கிடையாது. ஜாய்சுக்கு மண்ணை ஆளவேண்டும் என்ற விருப்பம் இருந்திருக்க வாய்ப்பே இல்லை. ஆனால் காவியம் இயற்ற பெறும் கனவு ஒன்று இருந்திருக்கிறது.  காவியம் இயற்றுவது ஒருவகையில் மண்ணை ஆளும் ஒருவனது வேட்கைக்கும் ஆளும் திறனுக்கும் இணையானதுதான். அப்படிப்பட்ட காவியம் வெறும் இலக்கிய  படைப்பு மாத்திரம் அல்ல மாறாக அது national epic ஆக இருக்க வேண்டும் என்று ஜாய்ஸ் ஆசைபட்டிருக்கிறார்.
திடீர் என்று இது போன்ற பேராவல் தோன்ற வாய்ப்பு இல்லை. யாரோ ஒருவர் இவரை அவ்வாறு எழுத பெறும் தாக்கத்தை இவர் மீது ஏற்படுத்தியிருக்க வேண்டும்.  இல்லையெனில் யுலிசஸ் என்ற மகத்தான படைப்பு அயர்லாந்தின் தேசிய காவியமாக உருபெற்றிருக்காது. National Epic  என்ற அவருடைய கனவு யுலிசஸ் என்றுதான் சொல்ல வேண்டும். ஜாய்சின் யுலிசசில் ஹோமர் நிச்சயம் பெறும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.  தலைப்பே அப்பட்டமாக சொல்கிறது, நாவல் ஒடிசியசின் பயணத்தை இழையோடச் செய்திருக்கிறது என்பதை.  எனினும் இக்காவியத்தை எழுத தூண்டியது செர்வான்டஸ் என்றுதான் சொல்ல வேண்டும்.  தன் படைப்பு டான் குவிக்சாட் போன்று இருக்க வேண்டும் என்ற தன் விருப்பத்தை ஜாய்ஸ் வெளிப்படையாக சொல்ல வில்லை. ஆனால் ஹேம்லட் மீதான தனது பற்றாசையை நாவலின் இழைப்பின்னலாக பின்னி இழையோட செய்திருக்கிறார்.
ஹோமரின் ஒடிசியும் சேக்‌ஷ்பியரின் ஹேம்லட்டுமே நாவலின் கட்டுமானப் போருட்கள். இதில் குவிக்சாட் என்ற பாத்திரத்தைப் பற்றி ஒரே ஒரு குறிப்பு மட்டுமே நாவலில் வருகிறது.  அந்த ஒரே ஒரு குறிப்பு மாத்திரம் போதும் மொத்த யுலிசசை டான் குவிக்சாட்டின் பாதிப்பு என்று சொல்லி விட.
Did you hear Miss Mitchell's joke about Moore and Martyn? That Moor is Martyn's wild oats? Awfully clever, isn’t it? They remind me one of Don Quixote and Sancho Panza. Our national epic has yet to be written, Dr Segerson says. Moore is the man for it. (Ulysses,  210) (டான் குவிக்சாட் Moore ஒருவனால் சொல்லப்பட்ட கதை என்பதை குறிப்பிட வேண்டியுள்ளது)
பாதிப்பு ஏற்படுத்திய படைப்பு வேண்டுமானால் பெறும் பாராட்டுக்களை அப்படைப்பின் மீது தெரிவிக்கலாம். பாதிப்படைய செய்கின்ற அனைத்தும் தான் அதுவாகவே மாற உடன்படுத்திக் கொள்ளும். ஜாய்ஸ் தன்னை ஒரு சேச்ஷ்பியராக, ஹோமராக பவித்துக் கொள்கிறார். அங்கே ஜாய் வேறு வழியின்றி தன் பிம்பத்தை அல்லாத வேறு ஒன்றை அடைய ஆசைப்படுகிறார். தனதல்லாத வேறொரு முகமான ஹேம்லட்யையும்,  யுல்லிசசையும் திறம்பட தன் படைப்பில் உருவாக்கி இருக்கிறார் . இது வரையில் அவ்விருவரின் தாக்கம் வெறும்  யுலிசசில் இலக்கியபடைப்பு மாத்திரமே. யுல்லிசஸ் என்ற நாவல் தேசிய காவியமாக உருப் பெற இவர்கள் அல்லாத முன்றாமவர் தேவைப் படுகிறார்.  அந்த மூன்றாமவர்வரான செர்வான்டஸ் யுலிசசில் தன் முகத்தை மறுவார்ப்பு செய்யாமல் ஜாய்சை தனித்த முகமாக மாற்றுகிறார் . செர்வான்டசின் டான் குவிக்சாட் ஐரோப்பிய நாவல்கள் அனைத்துக்கும் ஆன ஊற்றுக்கண் என்று சொல்லலாம் . அதில் இருந்து இந்த ஐரிஷ் நாவல் கூட தப்ப முடியாது போலும். ஜாய்ஸ் இதை ஒப்புக் கொள்ள  மாட்டார். அவரது விமர்சகர்களேக் கூட. பாதிப்பை எற்படுத்தாத எதுவும் மற்றொன்றை தன் இயல்பான படைப்பாக மாற்றாது. யுலிசஸ் ஒரு தன் இயல்பான ஐரிஷ் நாவலாக இருப்பதற்கு டான் குவிக்சாட்டும் சான்சோ பான்சோவும் முக்கிய காரணங்கள்.
வேண்டுமானால் ஸ்டீஃபன் டெடலஸ்சை டான் குவிக்சாட்டாகவும் புளூமை சான்சோவாகவும் பாவித்துக் கொள்ளலாம். இதில் என்ன கெட்டு விடப் போகிறது. முதலாவதாக டான் குவிசாட் எப்படி ஸ்டீஃபன் டெடலஸாக இருக்க முடியும் அல்லது புளும் எப்படி சான்சோவாக இறுக்க முடியும் என யோசிக்கலாம். புளூம் கதைப்படி டெடலசுக்கு தந்தையின் ஸ்தானத்தில் இருக்கிறான். தந்தையை தேடி வீட்டை விட்டு கிளம்புகிற டெலிமேக்கஸ் போன்று ஸ்டீபன் தன் ஒருநாள் டப்லின் நகர பயணத்தில் புளூமை  தன் தந்தையாக கண்டடைகிறான். குவிக்சாட் தன் சாகச பயணத்தில் கண்டடையும் தன் சாகச பயணத்தின் தோழன் சான்சோ. ஓரிடத்தில் குவிக்சாட் சான்சொவை மகன் என்று அழைக்கிறான். அப்படியே பார்த்தாலும் இரண்டு ஒப்புமைகளும் பொருந்தாமல் போகின்றன.  ஹேம்லட் மூலம் ஜாய்ஸ் தீர்வு ஒன்றை தருகிறார். அது, "He is in my father. I am in his son." மேலும் இதனை consubstantiality என்று அழைக்கிறார். இது தந்தையில் மகனையும், மகனில் தந்தையும் காண்பதாகும். ஜாய்சே இந்த சலுகையை நமக்கு அளிக்கிறார். மேற்கூறிய இந்த பொருத்தமின்மை இப்பொது இந்த consubstantiality தியரி  மூலம் பொருந்தி போகிறது. செர்வான்டஸ் என்ற தந்தைப் பிரதி பெற்றெடுத்த மகன் பிரதிதான் ஜாய்சின் யுலிசஸ். அல்லது டெலிமேக்கசாக யுலிசஸ் என்னும் நாவல் கண்டடைந்த தந்தை பிரதிதான் ஒடிசியஸ் என்னும் டான் குவிசாட்.  ஒரு வகையில் ஜாய்சும் செர்வான்டசும் ஒன்றுதான். இருவரும் நாடற்றவர்கள்.  செர்வான்டஸ் தன்  நாவலை ஸ்பெனின்  national epic  ஆக படைத்துப் அப்போது ஆட்சி செய்த பெர்டினான்ட் மற்றும் இசபெல்லாவுக்கும் மேலாக உயர்ந்துவிட்டார். ஜாய்ஸ் தன் தாய் மண்ணை யுல்லிசஸ் மூலம் சொந்தமாக்கிக் கொண்டார். காவியம் பாடுகிற கலைஞன் அரசனைக் காட்டிலும் மேலானவன். அவன் மண்ணை தனதாக்கிக் கொள்கிறான். வரி வசூலிப்பவன் மன்னன். மண்ணை ஆள்பவன் காவியம் படைக்கும் கலைஞன்.


ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்...