Friday, May 28, 2021

கடல்புரத்தில்: தீரா தாகத்தை தணிக்க முயலும் வாழ்க்கை என்னும் கடல் நீர்


நாவல் ஒன்றின் சிறப்பம்சம் என்பது தனக்கென அது கொண்டிருக்கும் வலுவான கதை சொல்லியின் குரல் என்று சொல்லலாம். எந்த அளவிற்கு கதை சொல்லியின் குரல் கதையோட்டத்தில் வளமாக தொனிக்கிறதோ அந்த அளவிற்கு கதையின் இசை நாதம் ரசிக்க கூடியதாக இருக்கும். எழுத்தில் மற்ற எந்த கலை வடிவத்திற்கும் இல்லாத சிறப்பம்சம் நாவலில் இந்த கதை சொல்லியின் குரல் என்று சொல்லலாம். இந்த கதை சொல்லியை ஆண் என்றோ பெண் என்றோ, எழுத்தாளன் என்றோ வகை பிரித்து அடையாளம் கண்டு பெயர் வைக்க முடியாது. இசையில் நாதத்திற்கு ஆண் பால், பெண் பால் என்று திணை பாகுபாடுகள் கிடையாது. கேட்கும் போது அது தரும் மொழி வகைப்படுத்த முடியாத உயிருக்கு மிக நெருக்கமான ஒன்று. வாசிப்பில் நாவல் வடிவம் என்பது வாசகனுக்கு அது இசைக்கப்படும் இசையின் குரல். அது தனித்த குரல். வேண்டுமென்றால் வசதிக்காக அதற்கு ஆண் எழுத்தாளர் என்றோ, பெண் எழுத்தாளர் என்றோ பெயர் வைத்துக் கொள்ளலாம். வண்ணநிலவனின் கடல்புரத்தில் கிளாசிக் நாவலை வாசிக்கும் போது இசை குறித்த இந்த பிரக்ஞை ஏற்படுகிறது. அல்லது கதை சொல்லியின் வளமான ’குரலின்’ தொனியை கண்டு “இது என்ன வகையான கதை சொல்லல்? யாருடைய குரல் இது? எப்படிப்பட்ட கதை சொல்லி இவர்? முன் மதிப்பீடுகள் எதையும் உருவாக்காமல் ஒரு கடலோர கிராமத்தின் வாழ்க்கையை அழகியல் ததும்ப கவிப்பூர்வமாக எவ்வாறு இங்கு கதையாக சொல்ல முடிகிறது?” என்று விடை காணா பல கேள்விகளை இந்நாவல் எழுப்புகிறது. இவைகளுக்கு எல்லாம் ஒரே பதிலாக வண்ணநிலவன் என்ற எழுத்தாளர்தான் அவைகள் அனைத்தும் என்ற ஒற்றை பதிலைக் கொண்டு விசாரத்தை முடித்துக் கொள்ள முடியாது. விடை காணா இந்த அருவமான கேள்விகளுக்கு ஒரே ஒரு பதிலாக இதனை இசையோடு பொருத்திப் பார்க்கும் போது நாவல் பற்றின ரசனையின் பாராட்டுதலாகவும் அது இருக்கும்.   

Tuesday, May 18, 2021

ஐய்யோ சென்றடைய கூடு இல்லையே

 




எழுத்தாளர்களின் ஆளுமையை அவர்களின் எழுத்து வழி மட்டுமே அறிந்து கொண்டால் போதும் என்று இருக்கும். நேரில் சென்று சந்தித்தால் அவர்களின் சிறுமை வெளிப்பட்டுவிடும். எழுத்தில் கண்டு வியந்த அந்த ஆளுமை அங்கு இருக்காது. மீறி போய் சந்தித்தால் அதுவரையில் அவர்கள் மீது கொண்டிருந்த பெரும் மதிப்பு கரைந்துவிடும். எழுத்தாளன் புத்தகத்தோடு மட்டுமே இருக்க வேண்டிய தனிப் பிறவி. மீறி நம்மை அவரோ அவரை நாமோ சென்று சந்திக்க வேண்டியதில்லை. எலும்புக் கூட்டின் மீது தசைகளையும் தோலையும் சேர்த்து கட்டி உருவாக்க பட்ட அந்த சாதாரண மனிதன் நமக்கு தேவை இல்லை. எழுத்தில் வெளிப்படும் ஆளுமை வேறு யதார்த்தத்தில் வாழும் எழுத்தாளன் என பெயர் கொண்ட அம்மனிதன் வேறு. அது Shakespeareகவே இருந்தாலும் சரி.

Wednesday, May 5, 2021

தொ சி மு ரகுநாதனின் புதுமைப்பித்தன் வரலாறு: கலகக்கார கலைஞனின் உருவச்சித்திரம்

தமிழ் நவீன இலக்கியத்தின் பெருங்கலைஞனுடைய வாழ்க்கையை வரலாறாக புனைய முற்படும் தோ சி மு ரகுநாதனுக்கு அப்புனைவு முடிவில் எப்படிப்பட்ட வடிவம் பெறும் என்ற கவலை அதிகம் இருந்திருக்கும் போலும். வரலாறு படைக்கப்பட்ட பின்பு  எதிர்பார்த்த படி அது வடிவம் கொள்ளாமல் போய் விட்டால் என்ன ஆவது என்ற கவலை. தொ சி மு புனைகதை எழுத்தாளன். ஆக, படைக்கப் படும் படைப்பு உயிர் கொண்டதாக இருந்தாக வேண்டும். பித்தனும் தன் படைப்புகளை உயிர் கொண்ட வாழும் பிறவிகள் என்றே அழைக்கிறார். தனிபெரும் பிறவிகளை படைத்து அவைகளுக்கு சாகா வரம் அளித்துவிட்டு மறைந்து போன படைப்பாளியைப் பற்றின வரலாறு உயிர் இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சம் இருக்கத்தானே செய்யும். தொ சி முவின் இந்த அச்சம், ஆதங்கம் அவரது முன்னுரையிலேயே தெரிகிறது. பித்தனுக்கு மிக இணக்கமாக இருந்தவர் தொ சி மு. மற்றவர் அறியாத பித்தனையும் அவரது வாழ்க்கைச் சம்பவங்கள் பலவும் ரகுநாதனுக்கு மாத்திரமே தெரிந்திருக்கிறது. அவைகள் அனைத்தையும் இந்த வரலாற்றில் சேர்த்தாக வேண்டும். அப்படிச் சேர்த்தால் பிறர் அறியாத தவல்கள் பல வெளிவரும். சேர்க்காவிட்டால் பித்தனின் வாழ்க்கை வரலாறு முழுமைப் பெறாது. தொ சி முவுக்கு பித்தனின் வாழ்க்கை வரலாறு ஜீவ கலை ததும்பும் உயிரோவியமாக இருந்தாக வேண்டும். எனவே ஒரு முடிவுக்கு வருகிறார்.

ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்...