Tuesday, March 27, 2018

ஸ்டீபன் ஹாக்கிங்கோடு ஒரு ஆழ்நிலை உறக்கம்

ஸ்டீபன் ஹாக்கிங்கோடு ஒரு ஆழ்நிலை உறக்கம்
உலகத்திலேயே மிகவும் ஆபத்தான செயல்பாடு விவாதிப்பது என தோன்றுகிறது. கைக்களப்பு என்றால் கூட பரவாயில்லை எண்ணங்களின் உரசல்? அது புரோட்டானையும் நியூட்ரானையும் மோதவிடுவது போலிருக்கிறது. அணுச்சிதைவும் எண்ணங்களின் மோதலும் நம் உள்ளான மனோவியல் உலகத்தை சிதைவுறச்செய்து ஆட்டம்காணச் செய்கிறது. ஒருவர் ஆக்ரோஷமாக விவாதிக்க வரும்போது அணுச்சிதைவுக்கு ஒப்பான பேராபத்து ஏற்படுமோ என பயம் பீடித்துக் கொள்கிறது. விவாதத்தை தவிர்க்க வேண்டும் போல் இருக்கிறது. அதே நேரம் வீம்புக்கு விவாத களத்தில் குதித்து அதன் சூட்டில் உச்சத்திற்கு சென்று சண்டை போட்டு வெற்றிபெற வேண்டும் என்ற பேராவல். எதிராளியை சொற்களால் வீழ்த்தவேண்டும் என்பதுதான் விவாதத்தின் நோக்கமே. எதிராளி மண்ணைக் கவ்வ வேண்டும்.
ஒருமுறை வாய்ச் சண்டை போட்டபின்பு அதன் பின்விளைவுகள் மிக நீண்ட நாட்களுக்கு தொடரும் போல. எப்படி ஒரு முறை அணுச்சிதைவு நடந்து அதன் பாதிப்பு பல காலங்களுக்கு ஒரு உயிர் பரிணாமத்தையே அங்கங் குறைய பாதித்தது போன்று நம் மன அழகை அகோரமாக்கிவிடுகிறது இந்த எண்ணங்களின் அணுச்சிதைவு. இருப்பினும் ஒருவர் பேச மற்றொருவர் அமைதியாக கேட்டுக்கொண்டிருக்க யாராலும் முடிகிறதில்லை. எதிராளி பேசிவிட்டார் அதற்கு எதிராக அல்லது இணையாக நம்முடைய கருத்தையும் பதிவு செய்துவிட வேண்டும் என்ற துடிதுடிப்பு மேலோங்குகிறது. ஒருவரும் இதற்கு விதிவிலக்கு கிடையாது. நான்கு பேர் அமர்ந்து விவாதித்துக் கொண்டிருக்கும் போது ஒருவர் அதற்கு சம்பந்தமே இல்லாமல் விவாதத்தின் வட்டத்திற்கு வெளியே இருந்து மூக்கை நுழைக்கிறார். அவர் அந்த நான்கு பேருடன் சம்பந்தப்படாதவர். அவர்கள் பேசும் மய்(மை)ய விசயம் ஒன்று அவருக்கும் மிகவும் தெரிந்த ஒன்று. அதைப் பற்றி தனக்கும் தெரியும் என்பது உள்ளூர அவருக்கே எவ்வளவு பெருமையான காரியம். அதைப் பற்றி ஒரு வார்த்தையாவது தன்னுடைய கருத்தைத் தெரிவித்தாக வேண்டும். இந்த வேலையில் தெரியும் என்ற அந்த ஒன்று வெறும் வார்த்தையாக மாத்திரம் வெளியே வரப்போவதில்லை. அது அதிகாரத்துடன் “எனக்கும் தெரியும்” என வெளிக்கிளம்பி புகைந்து கொண்டு வெளியேறும். எப்படி பெரிய அறிவு ஜீவிகள் பைப் பிடிக்கும் போது புகை திமிரோடு பைப்பில் இருந்து வெளியேறுமோ அதே போன்று நம்முடைய கருத்துக்கள் கூட மிடுக்குடன் வெளியேறுகின்றன.
எனக்கும் தெரியும் என்ற கருத்து வெளியேறிய உடனே அந்த கருத்து வெறுமனே சொல் வடிவம் பெற்ற உருக்கொண்ட ஒன்று கிடையாது. அது மீண்டும் சொல்லில் இருந்து சிதைந்து நச்சாக அடுத்தவரின் எண்ணத்தோடு மோத ஆரம்பிக்கிறது. இதில் பாதிப்படையப் போகிறவர் யார் என்பதுதான் மிகவும் கவலைக்கிடமான விசயம். விவாதத்தில் ஒருவர் தோற்கும் போது அவரது ஆழ்மனம் சிதைவுறுகிறது. மெல்ல மெல்ல அது உடலையும் பாதிக்க ஆரம்பிக்கிறது.
கருத்துக்கள் விவாதிக்கப்பட வேண்டும். அதற்கு ஒரு முன்கோரிக்கை இருக்கிறது. விவாதிக்கப்படுவது முரண்பட்ட நம்பிக்கையுடையவர்களின் மோதலாக இருக்கக் கூடாது. ஒரு குறிப்பிட்ட நம்பிக்கை சார்ந்த பொருளின் மீது அல்லது அதில் இருந்து ஒரே நம்பிக்கை என்னும் வட்டத்திற்குள் விவாதம் செயல்படுத்த வேண்டும். இதிலும் மதம் சார்ந்த விவாதங்கள் மிக மிக ஆபத்தானது. நம்பிக்கை பொருளோ அல்லது ஆளுமையோ முரண்பாடு அல்லது சார்புத்தன்மை என்ற நிலையில் இருவேறு தனி தளங்களில் இருந்து தனித்தனியாக வாதிடப்பட வேண்டும். இவைகள் ஒன்றாக ஒரே வட்டத்திற்குள் மோதவிடப்படும் போது புரோட்டானும் நியூட்டாரனும் மோதுவது போன்று ஆகிவிடுகிறது. விளைவு ஆக்கசக்திக்காக அல்ல அழிவுக்காகவே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. சரி ஆக்கத்திற்காகவாவது எதாவது கிடைக்கிறதே அதற்காகவாவது கொஞ்சம் மோதவிட்டால்தான் என்ன? என விவாதிக்கலாம். ஆக்கத்திற்கு பின்பு எஞ்சியிருக்கிற கழிவு? அதனை வெடிக்கச்செய்தே ஆக வேண்டும்.
முற்போக்கு வாதிகள் ஒருபக்கமாகவும். நம்பிக்கைவாதிகள் ஒரு பக்கமாகவும் நின்று கொண்டு ஒவருக்கு ஒருவர் சம்பந்தமே இல்லாது போன்று தனித்தனியாக தங்கள் விவாதங்களை எதையோ உற்பத்தி செய்ய முற்படலாம். பலன் மின்சாரம் என்றால் அது மிகவும் உபயோகமான ஆக்கச்சக்திதான். அதற்காக சண்டையில்லாமல் இந்த மோதலை நடத்தியாக வேண்டும். நம்முடைய தேவை எல்லாம் மின்சார சக்த்திக்கான ஆற்றல் அதிகம் உற்பத்தி செய்யப்பட்டாக வேண்டும். ஒருவேளை புரோட்டான் அதிகம் வலுவுடையதாகி நியூட்ரானை மேற்கொண்டு வெறும் கழிவுகளையே உற்பத்தி செய்தால் மோதலின் பயன் ஒன்றுமின்மைதான். அந்த மோதலை நடைபெறசெய்யாமலேயே இருந்திருக்கலாம்.
புதிய கண்டுபிடிப்புகள், புதிய சிந்தனைகள் தான் அதிகம் நமக்கு தேவையானது. அதைவிட்டுவிட்டு மோதலின் வட்டத்திற்கு வெளியில் இருந்து மூன்றாவது ஒரு மோதலை உள்ளே கொண்டவரக் கூடவே கூடாது. அது கழிவை அதிகம் உற்பத்தி செய்யும். அந்த கழிவு ஏற்படுத்தும் சேதம் என்பது தடுக்க முடியாத ஒன்று. கழிவுதானே தேவையில்லை என்று புறக்கனிக்கவும் முடியாது. காரணம் அது மிகுந்த வீரியத்துடன் வெளியேறுகிறது. நான்கு அறிவியல் மாணவர்கள் உரையாடும் இடத்தில் மகா பக்த சிரோமனியை அருகில் அமரசெய்யக்கூடாது. அப்படியே அருகில் இருந்தாலும் நம்முடைய நலனுக்காக நாம் அமைதிக்காப்பது நலம். அதிகம் உரையாடல் செயல்படும் போது அது அருகில் சூன்யத்தில் ஓய்வில் உறங்கிக் கொண்டிருக்கும். அறியாமை விழித்தெழுந்து தன்னுடைய மெய்ஞான அறிவே சர்வமும் என்று பெருமை பேசிக்கொள்ளும். அப்படியே மெய்ஞானம் மிகுந்திருந்திருந்தால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பதாகவே அதனை செயல்படுத்தி உலகத்தை நவீனப்படுத்தியிருக்கலாமே? அப்படி கேட்டால் மீண்டும் உறக்க நிலைக்குச் சென்று குரட்டை விட ஆரம்பித்துவிடும். அது ஒரு ஏகாந்த நிலை.
     ஆதலால் அந்த மூன்றாவதாக இருக்கும் செயலற்ற ஆற்றலை முடுக்கிவிடாமல் அதன் உறக்க நிலையிலேயே வைக்க வேண்டும். அது விழித்துக் கொண்டால் அதுவே கரும் வளையாமாக மாறி முழு பிரபஞ்சத்தையே விழுங்கிவிடும். அது தூங்கட்டும். நம் ஸ்டீபன் ஹாக்கிங்கோடு ஆழ்நிலை தியானத்தில் தூங்கட்டும். 

No comments:

Post a Comment

ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்...