Wednesday, May 5, 2021

தொ சி மு ரகுநாதனின் புதுமைப்பித்தன் வரலாறு: கலகக்கார கலைஞனின் உருவச்சித்திரம்

தமிழ் நவீன இலக்கியத்தின் பெருங்கலைஞனுடைய வாழ்க்கையை வரலாறாக புனைய முற்படும் தோ சி மு ரகுநாதனுக்கு அப்புனைவு முடிவில் எப்படிப்பட்ட வடிவம் பெறும் என்ற கவலை அதிகம் இருந்திருக்கும் போலும். வரலாறு படைக்கப்பட்ட பின்பு  எதிர்பார்த்த படி அது வடிவம் கொள்ளாமல் போய் விட்டால் என்ன ஆவது என்ற கவலை. தொ சி மு புனைகதை எழுத்தாளன். ஆக, படைக்கப் படும் படைப்பு உயிர் கொண்டதாக இருந்தாக வேண்டும். பித்தனும் தன் படைப்புகளை உயிர் கொண்ட வாழும் பிறவிகள் என்றே அழைக்கிறார். தனிபெரும் பிறவிகளை படைத்து அவைகளுக்கு சாகா வரம் அளித்துவிட்டு மறைந்து போன படைப்பாளியைப் பற்றின வரலாறு உயிர் இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சம் இருக்கத்தானே செய்யும். தொ சி முவின் இந்த அச்சம், ஆதங்கம் அவரது முன்னுரையிலேயே தெரிகிறது. பித்தனுக்கு மிக இணக்கமாக இருந்தவர் தொ சி மு. மற்றவர் அறியாத பித்தனையும் அவரது வாழ்க்கைச் சம்பவங்கள் பலவும் ரகுநாதனுக்கு மாத்திரமே தெரிந்திருக்கிறது. அவைகள் அனைத்தையும் இந்த வரலாற்றில் சேர்த்தாக வேண்டும். அப்படிச் சேர்த்தால் பிறர் அறியாத தவல்கள் பல வெளிவரும். சேர்க்காவிட்டால் பித்தனின் வாழ்க்கை வரலாறு முழுமைப் பெறாது. தொ சி முவுக்கு பித்தனின் வாழ்க்கை வரலாறு ஜீவ கலை ததும்பும் உயிரோவியமாக இருந்தாக வேண்டும். எனவே ஒரு முடிவுக்கு வருகிறார்.

புதுமைப்பித்தனது சரிதம் சோனிப் பிறவியாக இல்லாமல் நிறைமாதக் குழந்தைப் பிறப்பின் வனப்போடு விளங்க வெண்டும்மென்றால், சில விஷயங்களைக் குறிப்பிடத்தான் வேண்டும்”.

மேற்கூறியபடி இந்த வாக்கியம் தொ சி மு ரகுநாதன் புதுமைப்பித்தன் வாழ்க்கை சரிதம் நலமே வடிவம் பெற வேண்டும் என்ற அவரது ஆதங்கத்தை காட்டுகிறது. எனினும் தன்னுடைய படைப்பை சோனிப் பிறவியாக இல்லாமல்என்று சொல்லும் போது படைப்பு ஆரோக்கியமாக சரிவர முழுமைப் பெறாவிட்டால்என்ன ஆவது  என்பதைப் பற்றி அவர் யோசிப்பதற்கு பதிலாக அதற்கு எதிர் நிலையில் போஷாக்கு இல்லாத குழந்தையாக இருக்கும் நிலையில்  தன் புத்தகத்தை பற்றி பேசுகிறார். இந்த வாக்கியத்தை வாசிக்கும் போது வளர்ச்சியற்ற, போஷாக்கு இல்லாத மெலிந்த குழந்தை ஒன்றின் உருவம் கண் முன் தோன்றுகிறது. இந்த எதிர்மறையின் சித்திரமே இந்த வரலாற்றை கலை படைப்பாக மாற்றுகிறது. தொ சி மு இப்படி சொல்லும் போது பித்தனின் நோஞ்சான் உடலை (பூஞ்சை உடல்) அவர் மனதில் வைத்திருந்திருப்பார் என்று தோன்றுகிறது.

இதனை வாசிக்கையில் ரகுநாதன் முன்னுரையில் பேசும் இதே தொனியில் வேறு ஒருவர் பேசியிருக்கிறாரே என்ற துணுக்குறல் எற்பட்டது. ”சோனிப் பிறவியாக இல்லாமல்என்பதை முதல் முறையாக வாசித்திருந்தால் ரகுநாதனின் முன்னுரையில் அதற்கு அதிக கவனம் செலுத்தியிருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் வாசிப்பில் இந்த பதத்தைக் கடந்து சென்று இருந்திருக்கலாம். ரகுநாதனின் இந்த காத்திரமான வார்த்தை பிரயோகத்திற்கு இணையாக வேறொருவர் பயன்படுத்தியிருப்பதாக நினைவு. ஆம், அது ஆ. இரா. வேங்கடாசலபதியின் தொ சி மு ரகுநாதனின் புதுமைப்பித்தன் வரலாறு பற்றிய கட்டுரையாகும். ரகுநாதனின் வார்த்தையில் உள்ள இந்த வீரியம் சலபதியை வாசித்ததினால் உண்டான பிரமிப்பு அல்லது திடுக்கிடல்.

தான் கண்டு வியந்த பெருங்கலைஞனை வரலாற்றில் உயிர் ஓவியமாக ரகுநாதன் தீட்ட முயன்றார் என்றால் சலபதி தன் கட்டுரையில் ரகுநாதன் உயிர்படுத்திய நவீன கலைஞனை வரலாற்று புத்தத்தில் இருந்து உருவி எடுத்து பித்தனைப் பற்றின படைப்பு எப்படிப்பட்டது என்று காட்டுகிறார். சலபதியின் வழியே ரகுநாதனின் படைப்பை வாசிக்கும் போது புதுமைப்பித்தன் வரலாறு, பித்தனைப் பற்றின தகவல் கோர்வையாக இல்லாமல் அது கலைஞன் ஒருவனின் உருவ சித்திரம் என காண முடிகிறது. சலபதியின் பின் வரும் கூற்று  ரகுநாதனின் வார்த்தைகளுக்கு இன்னும் கொஞ்சம் சத்து சேர்க்கிறது,

சத்தான உணவும், குங்குமப்பூ போட்ட பாலும் பருகி வளர்ந்த தாய்க்குப் பிறந்த சுந்தாவின் ‘பொன்னியின் புதல்வ’ரோடு ஒப்பிடுகையில் ரகுநாதனின் ‘புதுமைப்பித்தன் வரலாறு’ போஷாக்கு இல்லாமல் பிறந்த குழந்தை. ஆனால் நிறைமாதக் குழந்தையின் வனப்புடன் ‘பிறந்தவுடன் நஞ்சுக்கொடியைத் தோளில் தூக்கிப் போட்டுக்கொண்டு கோஷமிட்டுக்கொண்டு’ ஓடிய அவதாரப் பிறப்பு. (நெருக்கடியான அவகாசத்தில் எழுதப்பட்டாலும் புதுமைப்பித்தனைப் பற்றிய முழு சித்திரத்தைத் தரும் நூல் ரகுநாதனுடையது)

‘பிறந்தவுடன் நஞ்சுக்கொடியைத் தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு கோஷமிட்டுக் கொண்டு’ என்று  சலபதி உருவப்படுத்த வரும் ஆளுமை ரகுநாதன் சொல்லவரும் அந்த சோனிப் பிறவி” குழந்தைதான். கல்கியின் வரலாறு கல்கியின் வாழ்க்கைப் பற்றின பதிவேடாக இருக்கலாம் ஆனால் அது கல்கியின் உருவச்சித்திரமாக இருக்க முடியாது.  போஷாக்கு இல்லாமல் பிறந்த ரகுநாதனின் கலகக்கார குழந்தை பித்தனைப் பற்றின வரலாறாக இல்லாமல் பித்தனையே உருவச்சித்திரமாக தீட்டிய  ஒரு ஆளுமையின் வெளிப்பாடு.

கட்டுரையில் சலபதி வரலாற்றாய்வாளராக சுந்தாவின் பொன்னியின் செல்வார் வரலாற்றை முன்மாதிரியான வரலாற்று புத்தகம் என மதிப்பளித்தாலும்  தேரந்த இலக்கிய  விமர்சகராக ரகுநாதனின் போஷாக்கு இல்லாத கலகக்கார குழந்தையின் மீதே அவருக்கு அதிக ஈர்ப்பு இருக்கிறது. மேலும் பித்தனை  வெறுமனே வாசிப்பதின் மூலமும் பாராட்டுவதன் மூலமும் பித்தன் என்ற ஆளுமையிடம் சென்றடைய முடியாது. பித்தனை பெருங்கலைஞனின் உருவச்சித்திரமாக கண்டு வியப்பது வேறொரு ஆளுமைகள் வழியே சாத்தியப்படுகிறது. தொ சி மு,  பிறந்தவுடன் நஞ்சுக்கொடியைத் தோளில் தூக்கிப் போட்டுக்கொண்டு கோஷமிட்டுக் கொண்டு ஓடிய” கலகக்காரனை அன்று பிறந்த குழந்தையாக தன் முன்னுரையில் வார்த்தெடுக்கிறார். இந்த புத்தகத்தை வரலாறு என்று சொல்வதைவிட புதுமைப்பித்தனின் உருவச்சித்திரம் என்று சொல்லலாம்.





 

No comments:

Post a Comment

ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்...