Monday, August 14, 2017

மிஸ்ட்டர் பேனா அமுக்கி


சென்ற வாரம் நெருங்கிய நண்பர் ஒருவரிடம் இருந்து கடிதம் ஒன்று வந்தது. என் வாழ்நாளில் இதுதான் எனக்கு வந்த முதல் கடிதம். அதாவது நீல நிற Inland letterல். ஆவலோடு பிரித்து வாசிக்க ஆரம்பித்தேன். வாசிப்பின் தொடர்ச்சியில் என்னை பயம் கவ்விக் கொள்ள ஆரம்பித்தது. அது ஒரு விமர்சனக் கடிதம். நான் எழுதிய “கூப்பிடுக்கள் புதுமைப்பித்தனை” கட்டுரைக்கான எதிர்வினை அது. கிழித்து தொங்கபோட்டுவிட்டார். எழுதிய கடிதத்தை அப்படியே என்னுடைய பிலாக்கில் பதிவிடும்படி உத்தரவும் போட்டுவிட்டார். சில வசவுகளை மாத்திரம் நீக்கிவிடுகிறேன் என்ற கோரிக்கைக்கு சம்மதம் தெறிவித்துக் கொண்டார். கடித்தத்தில் வந்த எதிர்வினை இதுதான்.

மிஸ்ட்டர் பேனா அமுக்கி,
விலை உயர்ந்த அந்த காமா பேனா அதிகம் இன்க் பிடிக்கும் என்பதால் கண்டமேனிக்கு எழுதுவதை தவிர்த்தல் நலமாக இருக்கும். பேசும்போது நாவடக்கம் எவ்வளவு அவசியாமோ அதே அளவிற்கு பேனாவைக் கையாளும்போதும் அதிகம் அவசியம். தர்க்கம் எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது. “கொசுக்களை வடிகட்டி ஒட்டகத்தை விட்டுவிடுகிறீகள்”. நான் ஒட்டகம் என்று சொன்னது வணிக இலக்கியத்தைப் பற்றினது. கொசுக்கள் என்று சொன்னது சீரியஸ் இலக்கியத்தைப் பற்றியது. சு ரா எங்கே அந்த வணிக எழுத்தாளர்கள் எங்கே. தமிழ் இலக்கியத்தைப் பற்றி பேசும்போது அதனை தமிழ் இலக்கிய விமர்சன பின்னணியில் வைத்துமட்டுமே விவாதிக்க வேண்டும். ஒருபோதும் நீங்கள் வரம்பை மீறி இங்கு உள்ள நவீன தமிழ் இலக்கியத்தைப் பற்றி விவாதிக்கும் போது மேல் நாட்டு இலக்கிய விமர்சனங்களை சண்டைக்கு இழுக்கக் கூடாது. இது ஆய்வு நெறிமுறை பிறழ்வு. நீங்கள் குறிப்பிட்ட கா. நா. சு வே ஒருபோதும் தன்னுடைய நவீன தமிழ் இலக்கிய விமர்சனத்திற்கு மேல் நாட்டு விமர்சனத்தையோ கோட்பாட்டையோ கையாண்டது கிடையாது. அந்தந்த பண்பட்டிற்கென்று அதற்கான அரசியல் இருக்கிறது. இதில் அங்குள்ள ஒன்றை இங்குக் கொண்டுவந்து முடிச்சு போடக் கூடாது. இருப்பினும் உங்களுடைய விவாதத்தை அதிகம் ரசித்தேன்.
இன்னொன்றையும் நீங்கள் அதிகம் கவனத்தில் கொள்ள வேண்டும். இலக்கியம் என்பது உன்னத சிந்தனையில் இருந்து பீரிட்டு வெளிப்படும் பிரவாகம் என்பார்கள். இதுதான் நம்முடைய நம்பிக்கையும் கூட. நம்முடைய தமிழ் இலக்கியத்தில் இதை நீங்கள் பார்ப்பீர்களானால் சிந்தனை எவ்வளவு செறிவானதாக இருக்கிறதொ அந்த அளவிற்கு அவர்களுடைய வாழ்க்கையும் இருக்கும் என நம்பலாம். அதிலும் சிலருடையதை கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது.
எது எப்படி இருந்தாலும் நம் நம்பிக்கையான உன்னத சிந்தனை மற்றும் அதில் இருந்து வரும் இலக்கியம் என்பதை அந்த சிந்தனையாளனுடைய வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது வாழ்க்கை மிகவும் மோசமானதாகத்தான் இருக்கும். உங்கள் கட்டுரையில் ஹெம்மிங்வே ஹெம்மிங்வே என்று மூச்சு முட்ட கத்துகிறீர்களே அவருடைய வாழ்க்கையில் அவர் என்ன அவ்வளவு ஒழுக்கவாதியா?. ஓரினச்சேர்க்கைக்காரர்தானே அவர்? ஒழுக்கம் ஒழுக்கமின்மை என்ற வரையறைக்கும் மீறி Sodomi என்று சொல்வார்களே அப்படிப்பட்டவர்கள் தானே இந்த ஐரோப்பிய இலக்கியவாதிகள் மற்றும் சிந்தனைவாதிகள்.
கேரக்ட்டரே சரியில்லை என்னும் போது அவர்கள் சிந்தனை மாத்திரம் உன்னதமாக இருந்து கொண்டாடுவது எவ்வளவு அபத்தமானது. அந்த ஹேம்மிங்வேவினின் ஒழுக்க சீலத்தோடு நீங்கள் சொன்ன சேசை சற்று ஒப்பிட்டுப் பாருங்கள். அதில் சேஸ் ஒழுக்கத்தின் சிகரமாகக் கூட இருக்கலாம். ஒழுக்கமாக இருப்பது என்பது வேறு உன்னதமான எண்ணங்களைக் கொண்டிருப்பது வேறு. ஏன் சுஜாதாவை எடுத்துக் கொள்ளுங்கள் நிச்சயமாக அவர் ஒழுக்க சீலர். மறுப்பேதும் இருக்க முடியாது. ஆனால் அவர் கதைகளில் சற்று மசாலா துக்கலாகத்தானே இருக்கிறது.
இந்தவகையில் உங்களுடைய கட்டுரை ஒரு இலக்கிய வடிகட்டி என்ற வகையில் ஒரு பெரிய ஒட்டகத்தையே நிறுத்தாமல் விட்டுவிட்டது. அதற்கு பதிலாக தேவையில்லாத சிறிய கொசுக்களை பூதமாகக் காட்டி அவைகளை ஒரு பொருட்டாகக் கருதி வடிகட்டியிருக்கிறது. நல்லா எழுதினீங்க போங்க கட்டுரையை. எழுதும் போது பக்குவம் பார்த்து எழுத வேண்டாமா?
மிக காட்டத்துடன் எழுதிக்கொள்ளும் உங்கள் நலம்விரும்பி

********

No comments:

Post a Comment

ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்...